கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 November, 2010

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது கிராமிய மக்கள் மத்தியிலும் வெகுகாலமாகப் புழங்கும் ஓர் அற்புதமான அனுபவப் பழமொழியாகும்.
மனிதர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும்; அவர்களை மட்டுமல்ல, அவர்களுடன் பழகுபவர்களிடமும்கூட இதன் தாக்கம் ஏற்பட்டு அவர்களது வாழ்வும் நோயற்ற வாழ்வாக அமையும்.

கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் கலைத்துறையில் நாடகம், சினிமா போன்ற துறைகளில் எளிதில் காணமுடியாத கொள்கை வைரமாகும்!

அவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இராது; மாறாக, வாழ்வியலை மற்றவர்களுக்கு ஒரு சில நொடிகளில் பதிய வைக்கும் ஆற்றலை உள்ளடக்கியவையாகும்!
அவர் மறைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குமேல் ஆன போதிலும்கூட, கலையுலகில் அவர் சாகா சரித்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்!
அவரது வாழ்க்கையில் பல்வேறு பழிகளுக்கு ஆளாகி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதை உள்ளபடி ஏற்றும்கூட, சிறையேகிய பின்னரும் உறுதி குலையாது, உண்மையை நிலைநாட்டி விடுதலையாகி வந்தும் தனது தொண்டறத்தைத் தொடர்ந்தவர்!
தனது பொருளையெல்லாம் தாராளமாக வாரி வழங்கிய ஒப்புவமை இல்லாத வள்ளல் அவர்!
எந்தெந்த வள்ளல்களைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; ஆனால், நம் கண்ணெதிரே வாழ்ந்த கலைவாணர் அவர்கள் தமது பொருள், செல்வத்தை ஊருணி நீராக மக்களுக்குத் தந்த மகத்தான உண்மை வள்ளல் ஆவார்கள்!

வாழ்க்கைச் சுருக்கம்

      நாகர்‌கோயில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டுபக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்
.
     இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

     கருத்துகள் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.

    அண்ணல் காநதியடிகளிடமும் காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பினனர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமது ஊரான அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.

கொலைக் குற்றச்சாட்டு

    அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள்

  • அம்பிகாபதி
  • மதுரை வீரன்
  • நல்லதம்பி

இவர் இயக்கிய படங்கள்

  • பணம்
  • மணமகள்

இவர் பாடிய பாடல்கள்

  • ஜெயிலிக்குப் போய் வந்த (பைத்தியக்காரன்)
  • பணக்காரர் தேடுகின்ற (பைத்தியக்காரன்)
  • ஆசையாக பேசிப் பேசி (பைத்தியக்காரன்)
  • ஒண்ணுலேயிருந்து (முதல்தேதி)
  • இடுக்கண் வருங்கால் (முதல்தேதி)
  • சங்கரியே காளியம்மன் (ரங்கோன் ராதா)
  • ஆராட்டமுடன் வாராய் (சிவகவி)
  • காட்டுக்குள்ளே (ஆர்ய மாலா)
  • ஒரு ஏகாலியைப் (ஆர்ய மாலா)
  • ஆரவல்லியே (ஆர்ய மாலா)
  • கண்ணா கமலக் கண்ணா (கண்ணகி)
  • கண்ணனெந்தன் (கண்ணகி)
  • இருக்கிறது பார் கீழே (மங்கையற்கரசி)
  • கண்ணே உன்னால் (அம்பிகாபதி)
  • சந்திர சூரியர் (அம்பிகாபதி)
  • தீனா...மூனா...கானா...(பணம்)
  • உன்னருளால் (ரத்னமாலா)
  • என் சாண் உடம்பில் (ரத்னமாலா)
  • சிரிப்பு இதன் சிறப்பை (ராஜா ராணி)
  • நாலுக் கால் குதிரை (ஆசை)
  • தாலி பொண்ணுக்கு வேலி (ஆசை)
  • சங்கரியே காளியம்மா (நன்னம்பிக்கை)
  • வாதம் வம்பு பண்ண (டாக்டர் சாவித்திரி)]
  • காசிக்கு போனா கருவுண்டாகுமென்ற (டாக்டர் சாவித்திரி)
  • கிந்தன் சரித்திரமே (நல்ல தம்பி)
  • ஏண்டிக் கழுதை (உத்தமபுத்திரன்)
  • தளுக்கான வால வயசு (உத்தமபுத்திரன்)
  • விடுதியில் மேய்திடுவோம் (ஜகதலப்ரதாபன்)
  • பெண்ணுலகிலே பெருமை (கிருஷ்ணபக்தி)
  • சங்கர சங்கர சம்போ (கிருஷ்ணபக்தி)
  • நித்தமும் ஆனந்தமே (பவளக்கொடி)
  • விஜய காண்டிப வீரா (பவளக்கொடி)
  • அன்னம் வாங்கலையோ (பவளக்கொடி)
  • இவனாலே ஓயாத தொல்லை (பவளக்கொடி)
  • சொந்தமாக நெனச்சு (வனசுந்தரி)
  • ஊன்னு ஒரு வார்த்தை (மனோன்மணி)
  • இன்னிக்கு காலையிலே (சகுந்தலை)
  • வெகுதூரக்கடல் தாண்டி (சகுந்தலை)
  • நல்ல பெண்மணி (மணமகள்)
  • ஆயிரத்திதொள்ளாயிரத்தி (மணமகள்)
  • சுதந்திரம் வந்ததுண்ணு (மணமகள்)
  • குடி கெடுத்த குடியொழிஞ்சுது (நல்லதம்பி)
  • மழையில்ல சீமையில் (தக்ஷயக்ஞம்)
  • சிவானந்த ரஸம் (தக்ஷயக்ஞம்)
  • இருவரும் ஒன்றாய் (தக்ஷயக்ஞம்)
  • சோனா இல்லன்னா (லைலா மஜ்னு)
  • சும்மா இருக்காதுங்க (நல்லகாலம்)

மறைவு

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30  ஆம் தேதி தனது 49-வது வயதில் கலைவாணர் மறைந்தார்.

கலைவாணர் அரங்கம்

தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது. தற்போது அது இடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் புதிய கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது,

4 comments:

  1. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  2. ஒரு ஆய்விற்காக பல முறை இவரின் குறிப்புகள் தேடி அலைந்திருக்கிறேன் அவற்றை ஒருங்கே கண்டத்தில் மகிழ்ச்சி எனக்கு .........நன்றி உங்களுக்கு

    ReplyDelete
  3. வெறும் 3 படம்தான் பாப்புலரா?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...