கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 December, 2010

யாருக்கு ஆறறிவு


குடிசை மீது வீசியெறிந்த
சோற்றுப் பருக்கையை
தின்ன வந்த காகம் 
தான் கரைந்து
தன் இனத்தை வளர்த்தது...

“உணவில் பங்கு கேட்டதற்காக
உற்றாரை கொள்கிறான்
மனிதன்”

யாருக்கு ஆறறிவு...!


அறுந்து விழுந்தால் ஆபத்து..
இருந்தும்
தன் சின்ன அலகால்
நூல் பொறுக்கி, நார் பொறுக்கி,
உச்சியில் கூடு கட்டி வாழ்கிறது குருவி...

“கட்டிய வீட்டை இடித்து விட்டு
வாஸ்து சரியில்லையென
வாசலில் நிற்கிறான் மனிதன்“

யாருக்கு ஆறறிவு...!



அறுந்துப்போகும் வலைகளை கண்டு
துவண்டுப்போகாமல்
எச்சில் தீரும் வரை
வலைப்பின்னி வலைப்பின்னி
வாய்ப்புக்கு காத்திருக்கும் சிலந்தி
 

“ஒரு முறை தோற்றால்
இனி வாய்ப்பே கிடைக்காது என
தற்‌கொலை முடிவில்
மனிதன்”
 

யாருக்கு ஆறறிவு...!



 பாலோடு நீர் கலந்து
பருகத்தந்தாலும்
நீர் பிரித்து பாலுண்ணும் அன்னம்
 

“மெய்யோடு பொய் கலப்பதே
கொள்கையாய்
மனிதன்”
 

யாருக்கு ஆறறிவு...!






தன்னை விட எடையுள்ள
உணவு தூக்கி
சேமித்து பழகி காட்டுகிறது
எறும்பு
 

“விவசாயி வீட்டில்
பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளையில்
மனிதன்”
 

யாருக்கு ஆறறிவு...!

 கல்லால் அடித்து
காயப்படுத்தினால்
கனிகொடுக்கிறது மரம்
 

“கண்அடி பட்டுவிடும் என்று
கன்னத்தை அழுக்காக்குகிறான் 
மனிதன்”
 

யாருக்கு ஆறறிவு...!


சிறகு விரித்து
உலகை அளந்து வர்ணஜாலம் காட்டுகிறது
வண்ணத்துப்பூச்சி
 

“கதவுகள் அடைத்து
ஜன்னல்கள் மூடி
வீட்டுக்குள்ளே அடைப்பட்டுக்கிடக்கிறான்
மனிதன்”
 

யாருக்கு ஆறறிவு...!
 

அறிவின் வளர்ச்சி என்பது
அனைத்திலிருந்தும் அர்த்தப்படுவது...
 

அத்தனை அறிவிலிருந்தும் விலகி
ஆறாதறிவில் பகுத்தறிவு பாய்ச்சி
பிரவேசிப்போம்...!
 

அப்போது தான் மனித இனம்
விலங்கை காட்டிலும் மேம்படும்...!

1 comment:

  1. ஊக்கத்திற்கு அருமையான வரிகள்...மிக அழகாக,எளிமையாக எழுதுகிறீர்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...