கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 September, 2011

பொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து வந்த ரஜினி! – வைரமுத்துவின் ஒரு பரவச கட்டுரை...


120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன். பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.  வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.

எத்தனை வதந்திகள்! எத்தனை தொலைபேசி அழைப்புகள்!

‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’

பொய்களில் பிறந்த கற்பனைகளையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு நிஜத்தைப் போல நிமிர்ந்து வெளிவந்துவிட்டார் ரஜினி.

மருத்துவத்தின் அறிவும் மனிதர்களின் அன்பும் அவரை இன்று மீட்டெடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டன கண்களில்.

ராகவேந்திரா மண்டபத்துக்குள் நுழைகிறது கார்.

அன்போடு என்னை அழைத்துச் செல்கிறார்கள் உதவியாளர்கள்.

மாடியிலிருந்து இறங்கி வந்து வாயிற்படியில் நின்று வரவேற்கிறார் ரஜினி.
தமிழ்நாட்டின் வசீகரம் – லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு மனிதர் – ஓடிக்கொண்டேயிருக்கும் உற்சாக நதி – பாடிக்கொண்டே திரியும் பரவசக் காற்று – என்னை நின்று வரவேற்று அழைத்துச் சென்றார் மாடிக்கு.

அறைக்கதவை அடைத்துவிட்டார்; இப்போது அவரும் நானும் மட்டும்.

‘‘நூற்றாண்டு வாழ்வீர்கள்; நோயின்றி வாழ்வீர்கள்!’’

அவரை வாழ்த்துகிறேன்; கைகள் பற்றிக் கண் கலங்குகிறேன்.

‘‘எப்படியிருக்கீங்க?’’ என்கிறார்.

‘‘உங்களைப் போலவே நல்லாயிருக்கேன்’’ என்கிறேன் நான்.

முகத்துக்கு முகம் பார்க்கவேண்டும் என்பதனால் எதிர்வரிசையில் அமர்கிறேன். கண்களால் அவரை அளக்கிறேன்.

நோயின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டாலும் அது பிடித்த பிடியின் தடம் ஆங்காங்கே பதிந்திருக்கிறது உடம்பில். ஆனால், மேகம் விலகிய இடுக்கில் சூரியன் சுடர்வி டுவது மாதிரி ஜொலிக்கின்றன அவர் கண்கள்.

அவர் புன்னகையை மறைக்காத இளந்தாடி முளைத்திருக்கிறது முகத்தில். பிள்ளை பெற்ற பெண்ணை அடிவயிற்றுச் சுருக்கங்கள் அடையாளம் காட்டுவதுபோல் சின் னதாய்ச் சாட்சி சொல்கிறது வடிந்தும் வடியாத வீக்கம்.

வெள்ளைப் பட்டையிட்ட கறுப்பு நீளக்கால்சட்டையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.

பழைய ரஜினியில் தொண்ணூறு விழுக்காடு பார்த்தேன். ஆனால் சொல்லில் அதே அழுத்தம். அசைவுகளில் அதே வேகம். உரையாடலில் அதே உற்சாகம். சிரிப்பில் அதே தெறிப்பு.

‘‘உணவு..?’’

‘‘பிடித்தமான உணவெல்லாம் சாப்பிடலாம்; ஆனால் பிடிக்கவில்லை.’’

‘‘உறக்கம்..?’’

‘‘நீண்ட நாட்களுக்குப்பிறகு இப்போதுதான் நிம்மதியாக உறங்குகிறேன்.’’

‘‘சர்க்கரை, கொழுப்பு, உப்பு, கிரியாட்டின்?’’

‘‘எல்லாமே கட்டுப்பாட்டில் இருக்கின்றன.’’

‘‘உங்கள் முகத்துக்குப் பழைய பொலிவு வந்து கொண்டிருக்கிறது. மருந்து வழியாக உங்கள் உடம்புக்குள் கிடக்கும் ரசாயனங்கள் வேலை முடித்து வெளியேறிவிட்டால் உங்கள் வசீகரம் மீண்டும் வந்துவிடும். அதற்குச் சில மாதங்களாகலாம்.’’

‘‘எனக்கும் நம்பிக்கை வந்திருச்சு; இன்னொரு ஜென்மம் எடுத்த மாதிரி இருக்கு எனக்கு.’’

‘‘உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்…’’

‘‘கேளுங்கள்’’

‘‘மனவலிமை என்பது பெரும்பாலும் உடல்வலிமையைச் சார்ந்தது. உடல் விழுகிறபோது மனமும் சடசடவென்று சரிந்தே போகும். நோயின் கோரப்பிடியில் சிக்கியிருந்த நாட்களில் உங்கள் உள்ளத்தில் ஓடிய எண்ண ஓட்டம்தான் என்ன?’’

‘‘ராமச்சந்திரா மருத்துவமனையில் 90 சதவிகிதம் எனக்கு ஞாபகமில்லை; எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கிறது: ஆனால் வைரமுத்து சார், ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு. அது டாடா, பிர்லா, அம்பானி, பில்கேட்ஸ் யாராக இருந்தாலும் உயிருக்குப் போராடும் நிமிடங்களில் எல்லாம்… எல்லாம் மறந்துபோகும். தன் புகழ், செல் வாக்கு, பணம் எதுவும் நினைவுக்கு வராது. தன் உடல், தன் உயிர் என்பதாக மட்டும் மனிதன் சுருங்கிப் போவான். யார் யாருக்கு நன்மை செய்தோம்; யாருக்கு இன்னும் செய்யவில்லை; எனக்குப் பிறகு இவர்கள் என்ன ஆவார்கள் என்ற ஒரே ஒரு சிந்தனை மட்டும்தான் எஞ்சி நிற்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது.’’

அந்த உளவியல் அதிர்ச்சியிலிருந்து நான் மீள்வதற்கு நேரமாயிற்று.

‘‘டீ சாப்பிடறீங்களா?’’

‘‘சாப்பிடலாம்.’’

தேநீர் வந்தது எனக்கு; மருந்தும் மாத்திரையும் வந்தன ரஜினிக்கு. விருந்தினர்கள் உரையாடும்போது ஒரு பணியாளர் பாதம் எடுத்து வைக்கும் ஓசையும் பாத்திரம் எடுத்து வைக்கும் ஓசையும் இல்லாமல் பரிமாறும் கலாசாரம் எத்தனை வீடுகளில் இருக்கிறது? ரஜினி வீட்டில் இருக்கிறது.

‘‘ராணா படத்தின் கதை விவாதத்தில் இந்த வாரம் கலந்து கொண்டீர்களாமே? ரவிகுமார் சொன்னார்.’’

‘‘ஆமா: சில மாறுதல்களோடு படப்பிடிப்பைத் தொடங்கவேண்டியிருக்கிறது.’’

‘‘சில மாதங்கள் கழிந்தாலும் பரவாயில்லை. முழு பலம் பெற்று உங்கள் உடலே உங்களுக்குக் கட்டளையிடும்போது களத்துக்கு வாருங்கள். நீங்கள் தொடாத உயரமில்லை; அடையாத வெற்றியில்லை; சேர்க்காத செல்வமில்லை. இனி உடல்நலம்தான் முக்கியம்.’’

வாய்விட்டுச் சிரித்தார் ரஜினி. பழைய சிரிப்பு; பளிச்சென்ற சிரிப்பு; தங்கச் சில்லறை அள்ளிப் பளிங்குத் தரையில் எறிவது மாதிரி கலகலவென்ற சிரிப்பு.

‘‘அது எப்படி பாலசந்தர் சாரும் சோ சாரும் நீங்களும் கூடிப் பேசியதைப் போல் ஒரே கருத்தைச் சொல்கிறீர்கள்?’’

‘‘அன்புக்கு வாய்கள்தான் வேறு வேறு; வார்த்தைகள் ஒன்று.’’

மீண்டும் சின்னதாய்ச் சிரித்தார்; நான் சொன்னதை ரசித்தார்; அப்படியே என் படைப்புக்குத் தாவினார்.

‘‘உங்க ‘மூன்றாம் உலகப் போர்’ பிரமாதம். எப்படி எழுதறீங்க? உட்கார்ந்தா அப்படியே வந்துடுமா?’’

‘‘இல்லை; இல்லை. அது அவ்வளவு சுலபமில்லை. வாழ்வில் பழுத்த சில விஷயங்கள் நெஞ்சில் ஊறப்போட வேண்டும் சில வருஷங்களுக்கு. அதே நினைப்பு; அதுவே மூச்சு; ஒரே சிந்தனை என்று உடம்பையும் மனசையும் ஒன்று குவிக்கவேண்டும். அதில் அறிவு எது, உணர்ச்சி எது என்று தெரியாத மாதிரி அத்வைதம் ஆகவேண்டும். ஒரே ஒரு அத்தியாயம் எழுத சில வாரங்கள் கூட எடுத்துக்கொள்கிறேன்.’’

‘‘நீங்களே கைப்பட எழுதுவீர்களா?’’

‘‘இல்லை; ஓசையோடு சொல்லுவேன். உதவியாளர் எழுதுவார். நேற்று எழுதியதைச் சொல்லுகிறேன். அதில், ‘இஷிமுரா’ என்ற ஒரு ஜப்பானியப் பாத்திரத்தை இந்தியாவுக்கு அழைத்து வருகிறேன்.’’

(என்னை நிமிர்ந்து பார்த்தார். இதழ்க்கடையில் புன்னகை இழையோடியது. ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகமில்லையா அதனாலிருக்கலாம்.)

இந்திய இளைஞன் ஒருவன் இஷிமுராவைக் கேட்பான்:

‘‘இந்தியாவில் நீங்கள் வியப்பது?’’’’

‘‘உழைப்பை’’

‘‘வெறுப்பது?’’

‘‘ஊழலை’’

‘‘இத்தனை ஊழல் இருந்தும் இந்தியா முன்னேறியிருக்கிறதே?’’

‘‘சேவல் தூங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப் போல அரசியல்வாதிகள் தூங்கும்போது இந்தியா முன்னேறி விடுகிறது.’’

‘சூப்பர்’ என்று சொல்லிக் கலகலவென்று கைதட்டினார் சூப்பர் ஸ்டார்.

அந்த கூர்த்த மதியும் ரசனையும்தான் அவரை எப்போதும் இளமையாக வைத்திருக்கின்றன.

‘‘எழுதி முடித்துத் தூங்கச் சென்ற நள்ளிரவில் எழுந்து அரசியல்வாதிகள் என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘சில’ என்ற துணைச் சொல்லைச் சேர்த்தேன்’’ என்றேன்.

‘ஓ’ என்று விழியுயர்த்தி ‘சரி’ என்று தலையாட்டினார்.

‘‘ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை நேரும்; இந்த நோயினால் நீங்கள் அடைந்த நன்மையென்ன?’’

‘‘மனைவி மக்களின் அன்பை அனுபவித்தேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் பேரன்பின் பெருக்கத்தை அறிந்துகொண்டேன். இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வை மறுபரிசீலனை செய்கிறேன்.’’

மது – புகை இரண்டிலிருந்தும் அவர் முற்றிலுமாக விடுபட்டுவிட்டார். ரசிகக் கண்மணிகளே! மதுவையும் புகையையும் தொடாதவர்கள் தொடாதீர்கள்; தொட்டவர்கள் விட் டுவிடுங்கள்.

அரசியல் நோக்கித் திரும்பியது பேச்சு.

இந்நாள் முதலமைச்சர், அவரிடம் பாசத்தோடு பேசிய பரிவைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடல் பத்திரிகையில் மறுநாள் பதிவான பிறகு முன்னாள் முதலமைச்சரோடு ரஜினி பேசியிருக்கிறார். பத்திரிகையில் வந்த உரையாடலைக் கண்டுகொள்ளாமல் கண்ணியம் காத்து அன்பு காட்டிய கலைஞரின் நாகரிகத்தைப் புகழ்ந்து சொன்னார்.

90 நிமிடங்களுக்கு மேல் பேசியிருப்போம். விடைகொண்ட போது படியிறங்கி என்னோடு பயணித்து கார்க் கதவு வரை வந்து கைகூப்பினார்.
மீண்டும் அவர் முகம் பார்த்தேன்.

‘‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’’

- என்ற வரிகள் என் நெஞ்சில் வந்து போயின. நிமிர்ந்து நின்ற ரஜினியிடம் பழைய கம்பீரம் பார்த்தேன்.

‘‘விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி’’
ரஜினி அறிவாளி!

-நன்றி: குமுதம்

22 comments:

  1. இப்பத்தான் குமுதத்தில் இதைப் படித்து முடித்தேன்.உடன் உங்கள் பதிவில்!ரஜினிக்கு நூறு வயதுதான்!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  3. குமுதம் நான் படிப்பதில்லை. ஆனாலும் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சிங்கம் மீண்டும் களம் இறங்கப் போகிறது ....வெல்கம் சூப்பர் ஸ்டார் ....

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு..நன்றி நன்றி. ரஜினியை (தலைவரை) நேரிலே கண்டு நாம் உரையாடியதை போன்ற தோற்றத்தை நம்முள்ளும் விதைக்கிறார் வைரமுத்து வார்த்தைகளால். அருமை

    ReplyDelete
  6. ரஜினி என்கிற வசீகர மனிதன்.....!!!

    ReplyDelete
  7. நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
  8. தலைவர் என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    ReplyDelete
  9. ஆகா தலைவர் பத்தி படிக்கிறதே அவரை பாக்குற மாதிரி இருக்கு..தலவர் என்னைக்கும் சூப்பர் ஸ்டார்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.

    இன்று இரவு(இலங்கை,இந்திய நேரப்படி)என் கடையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவு வர இருக்கின்றது..அவனைவரும் மறக்காமல கலந்து கொள்ளவும்(ஹி.ஹி.ஹி.ஹி இப்ப எல்லாம் எதுகும் விளம்பரம் செய்பது பேசன்)

    ReplyDelete
  10. நல்ல கட்டுரையை பதிவாக்கித் தந்தமைக்கு
    நன்றி.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி சௌந்தர்..

    ReplyDelete
  12. ‘இளமை இனிமேல் போகாது
    முதுமை எனக்கு வாராது’’ //

    வைரமுத்துவின் வைர வரிகள் போல ரனியின் நெஞ்சுரமும் இருப்பது தான் ரஜினியின் வெற்றிக்கான காரணமும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. ரஜினி ரசிகர்களுக்கும், அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும் நெஞ்சில் பால்வார்க்கும் கட்டுரைப் பகிர்வு. நன்றி சகோ.

    ReplyDelete
  14. நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க....

    ReplyDelete
  15. padikka ninythathy pathivil kattiyatharku nanri.......

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...