கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 March, 2013

தமிழீழக் கோரிக்கை - ஜெயலலிதாவின் கனவு பலிக்குமா..?


எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. 
 
தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் ஈழ ஆதரவுப் போராட்டம் தொடர்பிலான சிறப்புக் கவனவீர்ப்பு விவாதம் தமிழக சட்டச் சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்களை, இனப்படுகொலையை கண்டித்து இங்குள்ள மாணவ மாணவியர் போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மாணவ மாணவியரின் ஒட்டுமொத்தப் போராட்டம் அரசியல் கலப்பற்றதாக, இலங்கைத்தமிழர் நலனை மாத்திரமே நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 
இந்த உணர்வு பூர்வமான போராட்டங்கள், கவனவீர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதும், இலங்கை அரசு தமிழர்களைத் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றது. 
 
சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில் சிங்களவர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகின்றது.

தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் இலங்கையில் அரசு ஓர் இனவெறி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசன் கோரிக்கைக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இது எமக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கின்றது. 
 
இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகின்றேன் என்றார். இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 
 
எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிவித்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் போராட்டங்களைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்ப வேண்டும் மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே சட்ட சபையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை இன்னமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இதற்காக நாம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருக்க முடியாது. சென்னையில் இடம்பெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்று பிரதமருக்கு நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தியிருந்தேன். இதைப் போலத்தான் இந்தத் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். 
 
அவர் தனது உரையில் 2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு தமிழர்களை காக்கத் தவறிவிட்டதாகவும் கூறினார். உடனடியாக எதிர்ப்பு வெளியட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம் தி.மு.க சட்ட உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

5 comments:

  1. கனவு பலிச்சா நல்லா இருக்கும்..பலிக்கட்டும் ..

    ReplyDelete
  2. நல்லதே நடக்கட்டும்!மாறன்களின் டீமில் இலங்கை ஆட்டக்காரர்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் அம்மா!

    ReplyDelete
  3. நண்பரே... நம்மவர்களுக்கு யாராவது
    கோடு போட்டுக் கொடுத்தால் தான்
    ரோடு போடத் தெரியும்.
    அந்த வகையில் நம் மாணவர்கள்
    கோடு போட்டிருக்கிறார்கள்.
    இனி நம்மவர்கள் நிச்சயம்
    ரோடு போட ஆரம்பிப்பார்கள்.

    ReplyDelete
  4. மத்தியில் காங்கிரஸ் இருக்கும் வரை தமிழர்களுக்கு நல்லது நடக்காது.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...