கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 July, 2013

தேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை


விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் சுதந்திர உணர்வை வளர்த்ததிலும் சரி, விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் தேசபக்தியை மக்கள் மனதில் அழுத்தமாக விதைத்ததிலும் சரி... சினிமாவின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.

தெற்கு வடக்கு என்ற பேதங்களைத் தாண்டி இந்த விஷயத்தில் படைப்பாளிகள் மிகச் சிறந்த பணியைச் செய்தனர். பொழுதுபோக்கு என்ற பெயரில் தேசத்தின் உணர்வு மழுங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு தேசபக்திப் படம் வெளியாகி, நாம் இந்தியர் என்ற நினைப்பை நிலைநிறுத்திவிடும். ஷாஹீத் முதல் சக்தே வரை இந்த போக்கைக் காணலாம்.

சுதந்திர இந்தியா தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த தருணத்தில், அந்த தேசபக்திப் படங்களைப் பற்றிய ஒரு பின்னோக்குப் பார்வை...

ஷாஹீத் (1948)

நாடு விடுதலையடைந்த பிறகு வந்த படங்களில் மிக முக்கியமானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சுருக்கமான வரலாற்றுப்பதிவு இந்தப் படம். திலீப் குமார், காமினி கௌஷல் நடித்திருந்தனர். பல தேசபக்திப் படங்கள் உருவாக ஒரு அடித்தளமாக இந்தப் படம் திகழ்ந்தது என்றால் மிகையல்ல.

மதர் இந்தியா (1957)

நாடுதான் முக்கியம்... மகனா தாய் நாடா என்று வந்தால் மகனைக் கொல்லக் கூட தயங்காத ஒரு உதாரணத் தாயின் கதைதான் மதர் இந்தியா. கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு மட்டுமல்ல, கிராம வாழ்க்கைதான் இந்த தேசத்தின் கலாச்சார அடையாளம் என்பதை அத்தனை அழகாக படம்பிடித்திருந்தார்கள் இந்தப் படத்தில். மெஹபூப்கான் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் நர்கீஸ், சுனில் தத், ராஜேந்திரகுமார், ராஜ் குமார் என பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இசைமேதை நௌஷத் இசையமைத்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் வசூலில் பெரும் புரட்சி செய்த படம் இது. ஒரு வருடத்துக்குமேல் ஓடியது.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

 இந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல என்ற உண்மையை உரத்துச் சொன்ன படம் வீரபாண்டிய கட்டபொம்மன். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான முதல் கலகக் குரல் கொடுத்த தமிழ் மன்னன் வீரபாண்டிய கட்டமொம்மனின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கட்டபொம்மனாக வாழ்ந்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சொல்லப் போனால் கட்டபொம்மன் எப்படியிருந்திருப்பார் என்றே தெரியாத இந்த தேசத்துக்கு, அந்த வரலாற்றுப் பாத்திரத்தை தன் முகம் மூலம் பதிய வைத்தவர் நடிகர் திலகம்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்ரோ உலகப் பட விழாவில் பங்கேற்று விருது பெற்ற திரைப்படம். நிகரற்ற கலைஞரான சிவாஜி கணேசனுக்கு முதல் சர்வதேச அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

தமிழர் நெஞ்சங்களை விட்டு நீங்காத இந்தப் படம், இன்றைக்குப் பார்த்தாலும் உணர்ச்சி ததும்ப வைக்கும். இந்த காவியத்தைப் படைத்தவர் பிஆர் பந்துலு. இசை ஜி ராமநாதன். இந்தப் படத்தின் சிறப்பு அற்புதமான வசனங்கள். அவற்றைப் படைத்தவர் சக்தி கிருஷ்ணசாமி.

கப்பலோட்டிய தமிழன் (1961)

பிஆர் பந்துலு - நடிகர் திலகம் கூட்டணியில் வந்த இன்னுமொரு காவியம் கப்பலோட்டிய தமிழன். தென் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.


ஒரு நிஜ ஹீரோவின் உணர்ச்சிமயமான வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் நடிகர் திலகம். இந்திய சினிமாவின் ஒப்பற்ற படங்களின் வரிசையில் இடம்பெறத் தேவையான அனைத்து தகுதிகளும் நிறைந்த இந்தப் படத்தில், மகாகவி பாரதியின் பாடல்களை அத்தனை அழகாக இடம்பெறச் செய்திருந்தார் இயக்குநர் பந்துலு.

ஹகீகத் (1964)

தர்மேந்திரா - ப்ரியா ராஜ்வன்ஷ், சஞ்சய் கான் நடித்த இந்தப் படம் இந்திய - சீனப் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அன்றைய இந்திய அரசு இந்தப் படத்துக்கு ஆதரவளித்தது. இந்தப் படத்தில் மதன் மோகனின் இசை பெரிதும் பேசப்பட்டது. வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம்.

கிராந்தி (1981)

திலீப் குமார், மனோஜ்குமார், சசி கபூர், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படத்தை மனோஜ்குமார் தயாரித்து இயக்கினார். பிரிட்டிஷ் இந்தியாவில் 1825 முதல் 1875 காலகட்டம் வரை நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகள்தான் இந்தப் படம். மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியிலும் பெரிய வெற்றிப் படம் இது.

பார்டர் (1997)

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரிதும் பரிச்சயமான ப்ளாக்பஸ்டர் படங்களுள் ஒன்று பார்டர். 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், பூஜா பட் நடித்திருந்தனர். ஜேபி தத்தா இயக்கி பார்டர், தேசபக்திப் பட வரிசையில் மிக உன்னதமான இடத்தைப் பெற்றது.

லகான் (2001)

மிகச் சிறந்த தேச பக்திப் படம் என்று போற்றப்படும் படம் அமீர்கான் நடித்து தயாரித்த லகான். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட அநியாய வரியை கிரிக்கெட் மூலம் தகர்த்த கதை இது. ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ரூ 25 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ 57 கோடியை வசூலித்துக் கொடுத்தது. தேச பக்திப் படங்களுக்கு மீண்டும் உயிர் தந்த படம் இது. அசுதோஷ் கோவாரிகர் இயக்கியிருந்தார்.

ஸ்வதேஸ் (2004)

ஷாரூக்கானை வைத்து அசுதோஷ் கோவாரிகர் தந்த இன்னொரு தேசபக்திப் படம் இது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஆனால் ஏன் இந்தியாவால் ஒளிர முடியவில்லை? என்ற ஒற்றை வரி கேள்விதான் படத்தின் மையக்கரு. ரூ 20 கோடியில் உருவாக்கப்பட்டது. ரூ 70 கோடி வரை வசூலித்தது.

மிக அற்புதமான படங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது ஸ்வதேஸ். ஏஆர் ரஹ்மானின் இசை இன்னுமொரு ப்ளஸ் இந்தப் படத்துக்கு.

ரங் தே பசந்தி (2006)

ஷாரூ ரங் தே பசந்தி படம் ஜனவரி 26,2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும்.கோல்டன் குலோப் விருதிற்காக ஜூலை 6,2006 ஆம் ஆண்டும் மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் தனது பாட்டனார் டைரியில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விபரணப்படம் எடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றார். அங்கு இவரின் தோழியாகப் பழகும் சோனியா (சோகா அலி கான்) மூலம் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்குத் தேவையான கதாபாத்திரங்களாக டல்ஜீத் (அமீர் கான்) கரன் சிங்கனியா (சித்தார்த்),அஸ்லாம் (குனால் கபூர்),மற்றும் சுகி (ஷர்மான் ஜோஷி) போன்றவர்களை அறிந்துகொள்கின்றார்.ஆரம்பத்தில் இதனை மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஒப்பும் கொள்கின்றனர்.இவர்களைத் தொடர்ந்து அரசியல்வாதியாக விளங்கும் லக்ஸ்மன் பாண்டே (அதுல் குல்கர்னி)யும் சேர்ந்து கொள்கின்றார்.இவ்விபரணப் படத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று உண்மைகளை அறியும் இவர்கள் இந்தியாவிற்கு உதவி புரிவதில் தீவிரம் அடைகின்றனர். இதனைத் தொடர்ந்து சோனியாவின் கணவரான விமான ஓட்டுநரான அஜெய் (மாதவன்) விபத்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தன. இச்செய்தி பின்னர் அரசியல்வாதிகளின் பொய்யான கூற்றென்பதனை அறியும் இவரின் நண்பர்கள் அமைதி முறையில் போராடுகின்றனர். இதனைப் பொருட்படுத்தாது  இருக்கும் இந்திய அரசியல்வாதிகளை வன்முறை மூலம் அணுக ஆரம்பிக்கின்றனர். வன்முறையில் ஈடுபட்டனரா  என்று அழகாக சொல்லியிருக்கிறது இப்படம். (நன்றி விக்கிபீடியா)

சக்தே இந்தியா (2007)

யாஷ் சோப்ரா தயாரிப்பில் ஷிமித் அமின் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியா, தேசிய ஒற்றுமையின் அவசியத்தை ஹாக்கி என்ற விளையாட்டு மூலம் உணர வைத்த அருமையான படம். மிகப் பெரிய விஷயத்தை மிக அழகாக எளிமையாகச் சொல்லி உணர்ச்சி வசப்பட வைத்தார்கள்.


இந்தப் படத்தின் ஒரு காட்சியில், ஹாக்கி அணிக்கு தேர்வு பெறும் வீராங்கனைகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் நான் டெல்லி, நான் ஹரியானா, நான் ஆந்திரா என்று தன்னை பிரகடனப்படுத்தும்போது, அத்தனை பேரையும் தகுதியற்றவர்களாக அறிவிக்கும் ஷாரூக்கான், அணியின் ஒரு பெண் மட்டும் தன்னை இந்தியா என்று பிரதிநிதித்துவப்படுத்த, அத்தனை பேரும் தங்கள் தவறைப் புரிந்து கொண்டு தங்களையும் இந்தியா சார்பில் விளையாட வந்திருப்பதாக கூறுவார்கள். அந்தக் காட்சியில் படம் பார்த்த அத்தனை பேருமே கண்ணீருடன் எழுந்து நின்று கைதட்டிய காட்சியை... டெல்லியிலோ, மும்பையிலோ அல்ல... திருப்பத்தூர் என்ற இரண்டாம் கட்ட நகர திரையரங்கில் பார்க்க முடிந்தது!

இந்தப் படங்கள் என்றில்லை. இன்னும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி போன்ற மொழிகளிலும் எண்ணற்ற தேசபக்திப் படங்கள் வந்தன, வந்து கொண்டுள்ளன. மலையாளத்தில் வெளியான கீர்த்திசக்ரா மறக்கமுடியாதது.  (நன்றி தட்ஸ் தமிழ் மற்றும் கூகுள் இ‌மேஜ்)

ஐவி சசியின் 1921, தெலுங்கில் வெளியான அல்லூரி சீதாராமராஜூ, தமிழில் கிட்டூர் ராணி சின்னம்மா, பாரத விலாஸ், ரோஜா, பம்பாய், ஜெய்ஹிந்த், இந்தியில் கிஸ்மத், காந்தி (1948), கத்தர், 1942 எ லவ் ஸ்டோரி, சர்தார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி பர்கெட்டன் ஹீரோ, சர்பரோஷ், லெஜன்ட் ஆப் பகத் சிங் போன்றவை ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

மொழி, மாநில எல்லை, இன வேறுபாடு போன்றவற்றால், ஆயிரம் பேதங்கள் இருந்தாலும், இந்தியன் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் நீரு பூத்த நெருப்பாக அப்படியேதான் உள்ளது. அதை அவ்வப்போது விசிறிவிடும் அரிய பணியை இதுபோன்ற படங்கள் செய்து வருவது பாராட்டத்தக்கது. அதற்காகத்தான் வேறு எந்த தேசத்திலும் காணாத முக்கியத்துவத்தை சினிமாவுக்கு வழங்கி மகிழ்கிறார்கள் இந்தியர்கள்!

தொடரும்

(மீள் பதிவு...)
தங்கள் கருத்துக்காகவும் காத்திருக்கிறேன்...

9 comments:

  1. பார்த்திராத படங்களே அதிகம் உள்ளது
    பார்க்கவேண்டும் நிச்சயம்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான படங்கள் (இன்னும் இருக்கே...) நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சண் டீவி பேட்டியில் சிவாஜி கணேசன் ஒருமுறை இதைபற்றி பேசி இருந்தார் சினிமாவின் பங்களிப்பு பற்றி, சினிமாவுக்கு முன்பு நாடகங்களில் சுதந்திர வேட்கையை விதைத்தார்கலாம்....!

    ReplyDelete
  4. தங்களின் பதிவொன்றை, எனது இந்த பதிவிற்கு பயன்படுத்தி கொண்டுள்ளேன். நன்றி.

    குழந்தைகளின் உயிரை பறித்த உணவு.

    ReplyDelete
  5. இதில் நான் ஷாருக் படம் மட்டுமே பார்த்துள்ளேன்

    ReplyDelete
  6. அருமையான படங்கள் குறித்த அற்புதப் பகிர்வு....
    தொடருங்கள்... நாங்களும் தெரிந்து கொள்கிறோம்...

    ReplyDelete
  7. மிகச் சிறந்த தேச பக்திப் படம் என்று போற்றப்படும் படம் அமீர்கான் நடித்து தயாரித்த லகான். \\நீங்க காமடி கீமடி எதுவும் பண்ணலியே?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...