கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 August, 2013

உலகின் முதல் ஞானப்பழம்....




திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது பிறந்தவர் இவர். செங்குந்த வீர சைவ மரபினர்.

ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19-வது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர். மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்.

19-ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது ஆன்மிக மொழி பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.

அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக்கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி கைத்தல நிறைகனி என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் என்ற விருதை 1967-ம் ஆண்டு வழங்கியது. 1993 அக்டோபர் 19-ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள் 1993-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.

இன்று அவருடைய பிறந்த தினம்...
இந்த தினத்தில் அவரை நினைவு கூறுவது எனக்கு மகிழ்ச்சியே....!

9 comments:

  1. நன்றி... நினைவுகளுக்கு...

    ReplyDelete
  2. வாரியார் பற்றி அறியாத செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. யாவர்க்கும் மகிழ்ச்சியே.... நன்றி....

    ReplyDelete
  4. வாரியார் ஸ்வாமிகளைப் பற்றி நினைவுபடுத்திய பேரன்புக்கு நன்றி

    ReplyDelete
  5. நான் அவரை நேரில் பார்த்து அவர் கையால் விபூதியும், ஒரு கந்த சஷ்டி புத்தகமும் வாங்கி இருக்கிறேன். சுவாமிகளின் பெட்டியில் சிறுவர்களுக்கு கொடுக்க இதுப்போன்ற புத்தகங்கள் எப்பவும் உண்டு.

    ReplyDelete
  6. இளம் வயதில் சிறுத்தொண்ட நாயனார் குறித்துப்பேசி அவர் திருகரங்களால் பரிசு வாங்கிய அனுபவம் உண்டு. "நடுநிலை" என்ற ஒன்று கொள்கையாக வைத்திருத்தல் கூடாது. நல்லதை ஆதரித்தல் வேண்டும். அல்லாதனவற்றை எதிர்த்தல் வேண்டும். இதுவே சரியான திசை வழி. வாழிய நீடு !

    ReplyDelete
  7. வாரியார் சுவாமிகளின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...