கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 April, 2014

என் அவதாரங்கள்...



என் தலைமுடியை பிடித்து
உன் பச்சைநிற ரிப்பனில்
உச்சிக் குடுமி போட்டுப்பார்த்தாய்...

உன் நெற்றி பொட்டு எடுத்து
என்நெற்றியில் ஒட்டி அழகாகயிருக்கிறது
என்று குதுகலித்தாய்...

சுடிதார் போட்டால் எப்படியிருப்பீங்க...!
நீயே கற்பனை செய்துகொண்டு
விழுந்து விழுந்து சிரித்தாய்....
 

கொஞ்சுகையில் மீசை வேண்டாம் ‌‌என்று..கிறாய்
கெஞ்சுகையில் அதையே அழகு என்று..

என் மீசை எடுத்து உருமாற்றுகியாய்...

முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு...
தூக்கிவிட்டிருந்த காலரை மடித்துவிட்டு

நெடிக்குகொருமுறை எனை அலங்கரிக்கிறாய்..!

வீட்டில் இன்முகம்கூட காட்டாத நான்
ஒரு விகடகவியாகி
சிரிப்பால் உன்னை அழகுபடுத்துகிறேன்...!



இப்படியாய் உன்னை மகிழ்விக்க 
இன்னும் எத்தனை அவதாரங்கள் எடுக்கவும் 
நான் தயார்தான்...!

(உண்மையில் இப்படி ஒரு வாழ்க்கை வாய்க்கவில்லை)

18 April, 2014

தெனாலிராமன் விமர்சனம்.... பாதியில் ரத்து செய்யப்பட்ட காட்சி...!


இன்று புனித வெள்ளி என்பதைக்கூட மறந்து வடிவேலுவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற பரவசம்தான் மனதில் நிறைந்திருந்தது.. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு காணாமல்போன வடிவேலு இன்றைய பாராளுமன்ற தேர்தலின்போது கொஞ்சம் துளிர்க்க துவங்குகிறார் என்று நினைக்கும்போது மகிழ்வாகவே இருக்கிறது...

கொஞ்சநாள் காணாமல் இருந்த திரையுலகின் நகைச்சுவை சாம்ராஜ்ஜியம் இன்று புறப்பட்டு விட்டது... அதன் வருகையை உறுதிசெய்தும் திரைப்படம்தான் தெனாலிராமன்..  ஆளும் கட்சியிடம் இரகசியமாக உத்தரவு ‌வாங்கி... அந்த நம்பிக்கைப்பேரில் படத்தை துவங்கி நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து... தெலுங்கு அமைப்புகளிடம் ஏதே சில சிக்கல்கள் ஏற்பட்டு இன்று வெற்றிகரமாக திரையை தொட்டுவிட்டது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன்...

இன்று தேர்தல் சம்மந்தமான பணிகள் ஏதும் இல்லை, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது... ஆகையால் இன்று முதல் காட்சி பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு நானும் வேடந்தாங்கல் கரணும் காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் துளசி திரையங்கிற்கு சொன்றோம்.

கடந்த வாரம் வெளியான மான் கராத்தே படம் திருவள்ளூர் நகரில் கிருஷ்ணா மற்றும் லட்சுமி என இரண்டு திரையரங்குகளில் வெளியானது. நாங்கள் லட்சுமி திரையரங்கிற்கு சென்றோம் முதல் நாள் முதல் காட்சிக்கு வெறும் 30 பேர்தான் அரங்கில் இருந்தனர்... ஆனால் இன்று வடிவேலுவின் படத்தை பார்ப்பதற்கு 500 க்கும் மேற்பட்ட கூட்டம் இருந்தது.....

வழக்கம்போல் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் ஒருவரிடம் காசு கொடுத்து தூரமிருந்தே டிக்கெட் வாங்கி அரங்கில் வசதியான இடமாகப்பார்த்து அமைந்தோம்...  (டிக்கெட் விலை ரூ.50) அதன் பிறகே ஆரம்பித்தது வில்லங்கம்...!

ஓரளவுக்கு திரையரங்கம் நிறைந்திருந்திருந்தது.... 10.25-க்கு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படமும்.. அதைத் தொடர்ந்து புகைக்கு எதிராக விழிப்புணர்வு படமும் ஓடத் தொடங்கியது இந்த காட்சிகள் ஓடும் போதே திரையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது... அது என்ன வென்றால் படம் பெரியதாகி... அதாவது 200 %  அளவில் Zoom-ஆகி படம் ஓடியது... சரி விளம்பரப்படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகையில்.....?

தெனாலிராமன் படமும் இப்படியே ஓடத்‌துவங்கியது... படத்தின் பாதிஅளவு மட்டுமே திரையில் தெரிந்தது அதனால் யார் நடிகர்கள் என்றுகூட பெயர்கள் வாசிக்க முடிவில்லை முகங்களும் மறைந்து வந்தது... ‌ அரங்கில் சத்தமும்... கூச்சலும் போட்டார்கள்... சரியாகிவிடும் என்று நினைத்ததால்.. அடி வாயாடி.. பாடல் ‌வரை அப்படியே ‌ஓடியது.... ரசிகர்கள் எழுந்து அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர்...  சரி செய்துக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லியே அரைமணி நேரப்படத்தை ஓட்டிவிட்டார்கள்....

அதன் பிறகும் சரியாக வில்லை என்பதால் பொருமையிழந்த ரசிகர்கள் கூச்சலிட்டதால்... சரி செய்கிறோம் என கோ படத்தில் இருந்து பாடல்களை ஓடவிட்டனர்.... அதற்குள் பலரும் பணத்தை திருப்பிகொடு்ங்கள் என வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்... 


இறுதியாக 11.30 மணிக்கு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது.... ஆனால் மீதமிருந்த கொஞ்சப்பேருக்காக படம் போடமுடியாது என்றும்... அடுத்த காட்சிக்கான நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் முதல் காட்சியை ரத்துசெய்துவிட்டார்கள்...!

வெகு நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும்... அதேபோல் வெகுநாளுக்கு பிறகு விமர்சன பதிவு எழுதப்போகிற ஆர்வமும் தடைப்பட்டுவிட்டது... இனி அடுத்த காட்சி நேரம் பகல் 2.00 மணிக்கு பார்ப்போம்.... அதற்குள் என்ன வேலை வரப்போகிறதே... முடிந்தால் படம் பார்த்துவிட்டு மாலை விமர்சனம் எழுதுகிறேன்....

10 April, 2014

நாம் யாவரும் வாய் சொல்லில் மட்டும்தான் வீரரா..?

 
ஒரு சில விஷயங்களை மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று மார்த்தட்டும் தைரியம் நம் மனித குலத்துக்குமட்டுமே உள்ளது... மற்றவர்களின் கவனத்தை கவர... ஒரு இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்த... தன்னுடைய மதிப்பை கூட்ட இப்படி செய்யவேண்டியதாகிவிடுகிறது... சண்டையிட தைரியம் இல்லையென்றாலும் ஒரு வீரன்போல் பேசும் வீரர்கள் நாம்...

பார்க்காததை பார்த்ததாகவும்... செய்யாததை செய்ததாகவும்... தெரியாததை தெரிந்ததாகவும் பாவிக்கிற மனசு நமக்கு எப்படித்தான் வந்துவிடுகிறதோ என்று தெரியவில்லை... இந்த விஷயத்தில் எந்த ஒரு தனிநபரும் யாருக்கும் சலைத்தவர் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது நமக்கு மட்டும்தான் தெரியும்.

சிலரின் பிரச்சனையை கேட்கும்போது நானாக இருந்தால் இந்நேரம் அப்படி செய்திருப்பேன், இப்படி செய்திருப்பேன் என்று விளக்கம்கொ‌டுக்கும் நாம், அதே பிரச்சனை நமக்கு வரும்போது கால்கள் உதர நின்றுக்கொண்டிருப்போம் என்பதுதான் உண்மை....

இந்த உலகம் தகவல்களின் கலஞ்சியம்... ஒவ்வொறு நெடியும் எதையாவது கற்றுக்கொடுக்கூடிய பாடசாலை.. இதில் நாம் கற்பதற்குதான் அதிக கவனம் செலுத்துவதில்லை மாறாக கற்றுக்கொடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்... எல்‌லோரும் கற்றுக்கெர்டுப்பவர்களாக இருந்தால் கற்பதுயார்?
 
நாம் எதையும் முழுமையாக கற்கவில்லை.... நாமக்கு எதுவும் முழுமையாக தெரியாது.... என்று நமக்கு தெரியும் ஆனால் அதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்காமல் அதை தெரியும் என்போதுபோல் பாவனை செய்தால் என்னாகும் என்று விளக்கும் அழகிய ஜென்கதை ஒன்று...!

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.

அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.

அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.
 

அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.

துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.

பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.

அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.

இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது...

ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக்கொண்டு, அடக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செய்யும் காரியம்தான் வெற்றியையும் புகழையும் தரும்... வாய்ச்சொல்லில் எதுவும் நடந்துவிடாது.

04 April, 2014

மான் கராத்தே சினிமா விமர்சனம் / Maan karate Tamil movie review


தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒரு நல்லப்படங்கள் வாய்த்து அதன்மூலம் புகழின் உச்சிக்கு போய்விடுகிறார்கள்... ஆனால் அடுத்து வரும் படங்களில் அந்த புகழை தக்கவைத்துக் கொண்டு வெற்றி நடைப்போட்டவர்கள் ஒரு சிலரே...!  ஒருசிலப்படங்கள் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லவைக்கும் ஆனால் அடுத்து வரும் படங்கள் படுமொக்கைகளாக அமைந்து வந்தவழி தெரியாமல் போய்விடுவார்கள்...

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு அனுப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.. அந்த படத்தின் புகழ் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் திடீரென புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விநியோகஸ்கர் வரை படுகுஷியில் இருக்கவைத்தது... ஆனால்... தற்போது வந்துள்ள மான் கராத்தே படம்.. அவர் மீது உள்ள எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததா என்பது கேள்விகுறிதான்....!


மிகப்பெரிய கணினி நிறுவனமான சத்யம் கம்யூட்டர்ஸில் வேலை செய்யும் எதிர்நீச்சல் சதீஷ் உள்பட 5 நபர்கள் காடுகளில் சுற்றுலா செல்கிறார்கள்.. அங்கு ஒரு சித்தரை சந்திக்க நேர்கிறது. அவருடைய சக்தியை சோதித்துப்பார்க்க நினைக்கிறார்கள்... யாராவது ஒருவருக்கு மட்டும் ஒரு வரம் தருகிறோன் என்று சித்தர் கூற... இவர்கள்  ஐந்துபேரும் தன்னுடைய வரத்தை கேட்க... அதில் சதீஷின் விருப்பமான ஆயுதபூஜைக்கு மறுநாள் தினத்தந்தி ‌செய்திதாள் வரவைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை நிரைவேற்றுகிறார் சித்தர்.

துறவியும் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த செய்திதாளை தந்துவிட்டு செல்கிறார்... அதில் சில செய்திகளாக... சத்யம் சாப்ட்வேர் கம்பெனி மூடி நான்கு மாதம் ஆகிறது என்ற செய்தி வருகிறது... நம்ம கம்பெனி மூடிவிட்டார்களா..? இதுபொய் என முடிவெடுத்து அடுத்த நாள் அலுவலகம் செல்ல.. ஊழல் பிரச்சனையில் வெங்கடபதிராஜுவை கைது செய்து கம்பெனி மூடப்படுகிறது என்று அதிர்ச்சி தகவல் வருகிறது.



அதன்பின் என்ன செய்வது என்று தெரியாத இவர்கள்... மீண்டும் அந்த செய்திதாளை தேடி... அதில் வேறு என்ன செய்திகள் இருக்கிறது என்று பார்க்கிறார்கள்...


அதில் விளையாட்டுச் செய்திகளில் பீட்டர் என்பவர் குத்துச்சண்டையில் வென்று 2 கோடி ரூபாய் பரிசுபெருகிறார் என்ற செய்தி இருக்கிறது. சரி அவர் யார் என்று கண்டறிந்து இந்த போட்டியின் ஸ்பான்ஸராக நாம் வந்துவிடடு அந்த 2 கோடியை நாம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்த பீட்டரை தேடுகிறார்கள்..

அதன்பிறகுதான் தெரிகிறது குத்துச்சண்டை என்றால் என்னவென்று கூட தெரியாத சிவகார்த்திகேயன் தான் பீட்டர் என்பது இவர்களுக்கு தெரிய வருகிறது... 

சுமாராக இருக்கும் சிவகார்த்தி... ஹன்சிகாவை பார்த்த உடனே காதல் தெற்றிக்கொள்ள அவரிடம் எப்படி காதலை கணிய வைப்பது என்று தெரியாமல் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்...

இதற்கிடையில் சிவகார்த்தியை தேடி பிடிக்கும் அவர்கள்... அவரை எப்படியாவது இந்த போட்டியில் கலந்துக்கொள்ள வைக்க முயச்சிக்கிறார்கள்... ஹன்சிகாவுக்கு விளையாட்டில் மிகுந்த விருப்பம் ஆகையால் நீங்கள் குத்துச்சண்டையில் கலந்துக்கொண்டு ஜெயித்தால் உங்களுக்கு ஹன்சிகா கிடைப்பார் என்று ஆசைவார்த்தைகள் கூறி... குத்துச்சண்டையிட பயிற்சியும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொடுத்து குத்துச்சண்டையைில் கலந்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.



ஹன்சிகாவை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட்டாக குத்துச்சண்டையில் கலந்துக்கொள்ள முடிவெடுத்து நகைச்சுவையாக அதற்கான வேலையில் இறங்குகிறார் சிவகார்த்தி.... ஆனால் அதற்காக எந்த உத்வேகமும் கொள்ளாமல் விளையாட்டாக இருப்பது அபத்தம்..

அப்படி இப்படியென சிலபோட்டிகளில் தன்னுடைய குரும்புதனத்தால் இறுதிபோட்டிவரை முன்னேறும் சிவகார்த்தி... குத்துச்சண்டையில் மிகபிரபலமாக இருக்கும் கில்லர் பீட்டர் (வம்சிகிருண்னன்) சண்டையில் இறுதிப்போட்டியிக்கு வர அவரிடம்.... குத்துச்சண்டையின் போது குத்துச்சண்டையே தெரியாமல் மான்போல் ஓடி ஒளிந்து காமெடியோடி சண்டையிடும் மான்கராத்தே பீட்டர் (சிவகார்த்தி) எப்படி ஜெயிக்கிறார் என்று கடைசி 10 நிமிட படத்தைமட்டும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள்...


செய்திதாளில் இருப்பது எந்தபீட்டர் என்று குழம்பும் அந்த 5 பேரும்  சிவகார்த்திகேயனை போட்டியில் கலக்க வைத்து வெற்றியடையச் செய்தார்களா..? இறுதியில் குத்துச்சண்டைபோட்டியில் வென்றது எந்த பீட்டர்...? தன்னை குத்துச்சண்டைவீரர் என்று பொய் சொன்ன சிவகார்த்தியை ஹன்சிகா கரம்பிடித்தாரா..? என்பதை தான் கொஞ்சம் இழுவையாக இழுத்து முடித்திருக்கிறார்கள்...

சிவகார்த்திகேயனின் நடிப்பு படத்துக்கு படம் மாறுபட்டுவருவது மகிழ்ச்சி... ஆனால் இந்தப்படத்தில் அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..  ஹன்சிகாவை பார்த்து வழிவதும்... அவரை கவர முயற்சித்து பலஇடங்களில் மொக்கை வாங்குவதும்.... குத்துச்சண்டையே தெரியாமல் போட்டியில் கலந்துக்கொள்வதும்.. அதை ஒரு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் கோச் உள்பட அனைவரையும் கிண்டலடிப்பதும் பார்க்க சகிக்கமுடியவில்லை...



காமெடி நடிகர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் கதையையும் திரைக்கதையையும் அமைக்க வேண்டும்.. ஆனால் சீரியஸாக போகவேண்டிய கதைக்கு நகைச்சுவையாக திரைக்கதை எழுதியிருப்பது படுமொக்கையாக இருக்கிறது... எதிர்நீச்சல் படத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இந்தப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


குத்துச்சண்டையில் காமெடி நடிகர்களுடன் போடும் சண்டை செம ஜாலி... அப்படி இப்படி என பைனலுக்கு சென்றுவிடுவதுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒருசில குத்துச்சண்டைகளுக்கு நடுவராக சூரி வந்திருக்கிறார்... (கௌரவ தோற்றம்)... கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார்...

ஹன்சிகா  படம் முழுக்க அம்புட்டு அழகாக காட்டியிருக்கிறார்கள்.. ஆனால் அப்படிப்பட்ட அழகிக்கு 10 திருக்குறள் ஒப்புவித்தால் தன்மகளை திருமணம் செய்துவைக்கிறேன் என்று அவருடைய தந்தை சொல்லி ஆட்களை தேர்வு செய்வது அறுவருப்பு... அதிலும் கலந்துக்கொண்டு திருக்குறள் சொல்லமுடியாமல் திரும்புவது அதைவிட மொக்கை.... அதுவும் சில காமெடி பீஸ்களை வைத்து...


இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். பாடல்கள் சுமார் ரகம்தான் ஆனால் காட்சிகள் அழகாக வந்திருக்கிறது... ஒரு பாடலில் அனிருத் வந்து ஆடுவது பரவாயில்லை என்று பார்க்கவேண்டியதாயிருக்கிறது... ஒருசில பாடல்கள் பரவாயில்லை...

ஏ.ஆர். முருகதாஸ் அவர்களின் கதையை... இயக்குனர் திருக்குமரன் சரியாக கையாளவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.... உதவி இயக்குனர்கள் முதலில் வரும்போது கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதைஅமைத்து அனைத்து ரசிகர்களாலும் கவரகூடியராக இருந்தால்தான் அடுத்தடுத்து அவர் ஜொலிக்க முடியும்...

ஏற்கனவே பார்த்த காட்சிகள் கேட்ட நகைச்சுவை துணுக்குகள் என்று எந்தபக்கமும் ஒரு வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. முதல்பாதியும் பிற்பாதியும் விருவிருப்பு இல்லாத காட்சிகளால் எப்போது கிளம்பலாம் என்று என்னவேண்டிய சூழல்...


திருவள்ளூரில் கிருஷ்ணா, லட்சுமி என இரண்டு திரையரங்குகளில் படம் வெளிவந்துள்ளது. நானும் வேடந்தாங்கல் கரணும் லட்சுமியில் படம்பார்த்தோம்... எங்களுடன் மேலும் 30 பேர் படம் பார்த்தனர்...
 

இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் சறுக்கல்...!

01 April, 2014

பெண்ணே..! தயவு செய்து இப்படி செய்யாதே...!


 
ந்தவனங்களைவிட்டு இடம்மாறி
கூடைகளில் பூத்திருந்த பூக்களை 

நீ ஒருமுறை பார்க்கையில்
மூர்ச்சையாகிறது அனைத்தும்...!


உன்னைப்பார்த்த வேளையில்
மயங்கிப்போன அனைத்தையும்
நீர்தெளித்து எழுப்பிவிடுகிறாள்
பூக்களின் வேதனைபார்த்து பூக்காரி...!


ஒவ்வொரு பூவாய்
தொட்டு... தடவி... இதழ்பிரித்து...
வாய்ப்பளிக்கிறாய்
ஏதோஒரு ஒற்றை ரோஜாவுக்கு...!


தெளித்த நீர்த்துளிகளை
கண்ணீர் துளியாய் காட்சிப்படுத்தி
கவலையோடு கலங்கி நிற்கிறது
மற்ற பூக்கள் அனைத்தும்...!


கோதிவிட்ட கூந்தலோடு
சேர்ந்துக்கொண்டு கர்வப்படுகிறது ஒன்று
தவிர்த்துவிட்ட வே‌தனையில்
தவிக்கிறது மற்றவைகள்...!


கூடி குழைந்து வாடி வதங்கி
உதிரும் வேளையில் கூட
சிரித்துக்கொண்டே சிதைந்துப்போகும்
வாய்ப்பு உன்னோடிருக்கும் பூக்களுக்குத்தான்...!


நொந்து வெந்து வலித்து சகித்து
மாலைவேளையில்
மயக்கிக்கொண்டே மரணிக்கும் வாய்ப்பு
உன்னை அடையா பூக்களுக்கு...!


உனக்கு எத்தனை முறை சொல்லுவது
பூக்கடைகளுக்குச் சென்று
பூக்களுக்குள் கலவரம் 

ஏற்படுத்தாதே என்று...!

வேண்டுமென்றால்
அனைத்து பூக்களையும் அரவணைத்துக்கொள்
இல்லையென்றால்
பூக்களை சூடுவதை நிறுத்திக்கொள்...!


உன்னைப்பார்த்து 

சில பூக்கள் கர்வப்படுவதையும்
சில பூக்கள் காயப்படுவதையும்
பார்த்து சகிக்கும் மனசு
என்னிடத்தில்லை...!




Related Posts Plugin for WordPress, Blogger...