கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 February, 2015

நீங்கள் பழைய சோறு சாப்பிடுபவரா....?


சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே....

உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே....

என்ற தலைவர் பாடல் எங்கிருந்தோ வந்து காதுகளில் வாழியாக என்மூளையில் குதித்தது.... அப்படா என்ன ஒரு பாடல்.. என்ன ஒரு வரிகள்... புலமைப்பித்தன் ஐயா அவர்கள் எழுதிய இந்தப்பாடலுக்கு தனியாக விளக்கம் ஏதும் ‌சொல்லவேண்டியதில்லை... (தற்போதை பாடல்களுக்கு  எத்தனை அகராதிகளை பார்ததாலும் விளக்கம் கிடைப்பதில்லை)

உலகில் உழைப்பின்றி மாறுவதில்லை எதுவும்... உலகே மாறும்போது நம்முடைய வாழ்க்கை மட்டும் மாறாமலா போய்விடும்.... தற்போதைய உலகில் உழைத்து பணம் சம்பாதித்து வசதியாக இருப்பவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லை... ஆனால் போன தலையில் சொத்து சேர்த்து தற்போதைய தலைமுறையை சார்ந்தவர்கள் அதை அனுபதிக்கும்போது அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரிவதில்லை.... 

உழைக்காம சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும் என்று கிராத்தில் கேட்பார்கள்... ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உழைக்காம சாப்பிடுவர்கள்தான் உடம்புமுழுவதும் ஊதிக்கிடக்கிறார்கள்...

உழைத்து வரும் காசில் வீண் செலவு செய்யத்தோனாது... ஆனால் உ‌ழைக்காமல் வந்த பணத்தில்.... ஹோட்டல், பார்க், ரிசார்ட், தியாட்டர், பார், பந்தயங்கள் என அவர்கள் செய்யும் அட்டகாசம் தினம்தினம் நாம் பார்ப்பதுதான்... சிலப்பேர் உணவகங்களில் கொடுக்கும் டிப்ஸ் என்பது ஒரு ஏழைக்குடும்பத்தில் ஒரு நாள் வருமானமாக இருக்கிறது...

தான் சம்பாதிக்காமல் தன்னுடைய அப்பனோ.. பாட்டனோ சம்பாதித்த பணத்தில் இவர்கள் செய்யும் அட்டகாசம் விவரிக்கமுடியாது.... முன்னோர்கள் சம்பாதித்ததை மூலதனமாக கொண்டு இன்னும் முன்னேறும் திறமைப்படைத்தோர் நிறையப்பேர் இருக்கிறார்கள்... நான் சொல்வது முன்னோர் சம்பாதித்ததை தற்போது உண்டும், குடித்தும் அழிக்கும் சிலரை மட்டும்தான்...



தான் சம்பாதிக்காமல் அடுத்தவர் சம்பாதித்ததை அது அப்பன் சம்பாத்தியமோ...  அல்லது பாட்டன் சம்பாதித்தாக இருந்தாலும் சரி உட்கார்ந்து சாப்பிடுதல் என்பது மிகவும் கேவலமானதுதானே... அதற்காகத்தான் இந்த குட்டிக்கதை...

மிகவும் நல்ல வசதியான சோம்பேறி ஒருவன் வேலைக்குப் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் சீட்டாடிக் கொண்டு காலத்தை வீணாக கழித்தான்.

ஒருநாள் அவன் அப்படி விளையாடிக் கொண்டிருந்தபோது உள்ளிருந்து அவன் மனைவி அழைத்தாள். "உள்ளே வந்து பழையது சாப்பிட்டுவிட்டுப் போங்கள்'' என்றாள். அதனைக் கேட்ட அவனது நண்பர்கள் திகைப்படைந்தனர். "இவ்வளவு வசதியிருந்தும் இவன் பழையது சாப்பிடுகிறவனாயிருக்கிறானே' என்று. அவனும் எழுந்து உள்ளே போனான். அங்கே அவனுக்கு மனைவி அறுசுவை விருந்து சமைத்திருந்தாள்.

"இப்படி சமைத்துவிட்டு, பழையது சாப்பிட வாங்க என்று கூப்பிட்டு, என் நண்பர்கள் முன்னே அவமானப்படுத்திவிட்டாயே'', என்றான் கணவன். அதற்கு

""சாப்பாடு சூடான சாப்பாடுதான். ஆனால் இது நீங்கள் சம்பாதித்ததில் சமைத்தது இல்லையே... உங்க முன்னோர்கள் சம்பாத்தியத்தில் வந்ததுதானே... அதனால்தான் "பழையது' என்றேன்'' என்றாள் மனைவி.

உழைக்காமல் வீணடிக்கும் நேரம் நம் எதிர்காலத்தை நாம் சிதைக்கும் நேரமாகும்... என்பதில் கொஞ்சமும் சந்தேமில்லை. உழைப்புக்கு தகுந்த பலன் தற்போது கிடைக்கவில்லை ‌என்னறாலும் ‌அதற்கான பலன் எப்போதாவது கண்டிப்பாக நம் வாசலை தட்டியே தீரும். தம்முடை வேலை உழைப்பதுமட்டுதான்.... உழைத்து தன்காசில் உண்ணும் எதுவாக இருந்தாலும் அது அமிர்தமே... மீண்டும் தலைப்பு.... நீங்கள் பழைய சோறு சாப்பிடுபவர்களா...? அப்படியென்றால் வேண்டாம் அது....!



உழைப்பினால் உலகே மாறியிருக்கிறது
நம் வாழ்க்கை மாறாதா என்ன?


வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள்
அந்த மாற்றம் உழைப்பால் மட்டுமே சாத்தியம்...!

4 comments:

  1. உழைக்காமல் உண்பது கேவலமன்றோ
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  2. சிறப்பான கருத்துக்களை குட்டிக்கதையோடு பகிர்ந்து அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வணக்கம்
    உழைப்பில்தான் இந்த உலகம் சுற்றுகிறது... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சொன்ன விதம் அருமை...

    குட்டிக் கதை சிறப்பு...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...