கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 April, 2016

10-வது சமூக அறிவியலில் 100-க்கு தடைப்போட்ட அமெரிக்கா மற்றும் சணல்...!


பள்ளிக்கூடங்களை கடக்கும்போது இனம் புரியாத ஒரு ஏக்கம் நம்மில் எட்டிப்பார்க்கும்.... பள்ளி வளாகத்தில் குழந்தைகளை பார்க்கும்போது ஏதோ நந்தவனத்தில் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பதுபோன்ற உணர்வை நமக்கும் ஏற்படுத்தும்... ஒவ்வொறு மனிதனின் வாழ்க்கையிலும் வசந்தக்காலமாக என்றும் பசுமை மாறாமல் இருக்கும் காலங்கள் எதுவென்றால் அது பள்ளிபருவக்காலம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருந்துவிடமுடியாது.... 

பள்ளிக்காலங்களில் ஒவ்வொறு நிமிடத்தையும் ரசித்து ருசித்து வாழ்ந்தோம் என்பது அப்போது நமக்கு தெரியாது பிற்காலத்தில் நாம் அக்காலங்களை அசைப்போடும் போதுதான் அதன் அர்த்தம் நமக்கு புரியும். பள்ளிப்பருவத்தில் கற்ற கல்வி... பெற்ற நட்பு... கற்பித்த ஆசிரியர்கள்... கொண்ட காதல்... செய்த குறும்பு... விளையாட்டுகள்... அப்பப்பா.. அவைகள் என்றும் நம் மனதைவிட்டகலாத வாழ்க்‌கைப்பதிவுகள்..


படிப்பு முடித்து வேறு பணிகளுக்கு செல்வோருக்கு கிடைக்காத பாக்கியம் ஆசிரியர் பணிக்கு செல்பவர்களுக்கு கிடைக்கும்... நம்பள்ளி வாழ்வை மீண்டும் நம்கண்முன்னே பார்க்கும் அறிய பாக்கியம்தான் அது.....  அப்படிப்பட்ட பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன் என்று என்னும்போது மனதுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.... 

பொதுவாக ஜுன் மாதத்தில் தொடங்கும் கல்வியாண்டானது ஒவ்வொறு நாளும் ஒரு அனுபவத்தை வைத்துக்கொண்டிருக்கும்... ஆண்டுமுழுவதும் மாணவர்களுடன் பழகி அவர்களின் திறமைகள், சாதனைகள், குறும்புகள், அடாவடிகள், ஆடல் பாடல் மோதல் என் அத்தனை நிகழ்வுகளையும் சந்திக்க வேண்டிருக்கும்... காலஓட்டத்துக்கு ஏற்ப மாணவர்களின் செயல்பாடும் தற்போது மிகவும் வித்தியாசமாக மாறியிருக்கிறது... அதை நம் காலத்தோடு ஒப்பிட்டுபார்க்ககூட முடியவில்லை...!



பள்ளி காலத்தில் முதல் சோதனைக்காலமாக மாணவர்கள் கருதுவது 10-ம் வகுப்புதான்... காரணம் மற்றவகுப்புகளுக்கு தேர்ச்சி என்பது ஒரு கடினமான விஷயம் அல்ல.. ஆனால் 10-ம் வகுப்பு என்பது பொதுத்தேர்வாக இருப்பதுதான் இதற்கு காரணம்...  அதனால் அவர்கள் தேர்ச்சி அடைய வைக்க 10 வகுப்பு மாணவர்களிடம் நாங்கள் படும் பாடிருக்கே அப்பப்பா... அதைச் சொல்லத்தேவையில்லை ஏனென்றால் நாம் அனைவரும் 10 வகுப்பு படித்தவர்கள் தானே... அப்பவே நாம் என்னன்ன செய்திருப்போம்... அப்பவே அப்படியென்றால் இக்காலகட்டத்துக்கு மாணவர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்...


பத்தாம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் எப்போதும் ஒரு பிணைப்பு இருக்கும். அந்த பிணைப்பில் ஆண்டுமுழுவதும் தொடச்சியாக இருக்கும் மாணவர்கள் மட்டுமே நல்லதொரு மதிப்பெண் எடுத்து காட்டுகிறார்கள்... அந்த பிணைப்பில் இருந்து சில மாணவர்கள் விலகி அவர்போக்குக்கு தன்னை மாற்றிக்கொள்கிறார்கள்... மாணவப்பருவத்தில் தன்னை கதாநாயகனாக உருவகப்படுத்திக்கொள்ளும் காலக்கட்டமும் இந்த காலக்கட்டம்தான்...


பத்தாம் வகுப்பு பொருத்தவரை அவர்களுடைய க்ளைமாக்ஸ் எதுவென்றால் அவர்கள் எழுதும் அரசு பொதுத்தேர்வுதான்... அதை எழுதும் வரை அவர்கள் ஏதோ மந்திரித்துவிட்டது போல் இருப்பார்கள்.. (நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டும்) பொதுத்தேர்வு முடிந்தவுடன் தான் அவர்கள் சகஜநிலைக்கு திரும்புவார்கள்...


ஆனால் ஆசிரியர்களுக்கு எது க்ளைமாக்ஸ் என்றால் பத்தாம் வகுப்பு பொதுத்‌தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிதான்... பொதுவாக பள்ளியில் நடக்கும் தேர்வுகளில் மாணவர்கள் அதிகம் கட்டுக்கதைகளை விடுவதில்லை ஏனென்றால் அந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அவர்களிடம் வழங்கப்படும்... அப்படி கதையடித்திருக்கும் மாணவர்களின் விடைத்தாளை தரும்போது அதை படித்து காட்டிவிடுவார்களோ என்ற பயம்தான்... ஆனால் பொதுத்தேர்வு அப்படியல்லா.. விடைத்தாள் அவர்களுக்கு திரும்ப வராது...


தற்போதுதான் 2016-ஆம் ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றிறுக்கிறது... இருக்கும் பாடங்களிலே ‌கதையடிக்க ஏற்றப்பாடம் எதுவென்றால் எல்லோருக்கும் தெரியும் அது சமூக அறிவியல் பாடம் தான்... அம்புட்டு கதைகள் இருக்கும்...

இதில் இவர்கள் தரும் வரலாறு என்பது எந்த வரலாற்று ஆசிரியரும் எழுதாத புது வரலாராக இருக்கும்... விடைத்தாள் திருத்தும்போது விடை‌களை படிக்கும்போது அவ்வளவு சுவாரஸ்யமும் நகைச்சுவையும் நிறைந்ததாக இருந்தது... அதில் சொந்த புராணம்... சோக கதை... சினிமா கதை... தேர்ச்சி செய்யச்சொல்லி கடிதங்கள் என மனதுக்கு வந்ததையெல்லாம் எழுதிவைப்பார்கள்.

விடைத்தாள் திருத்தும்போது ஒவ்வொரு விடைத்தாளும் ஒரு அனுபவமாக இருக்கும்...  காந்தி இருக்கவேண்டிய இடத்தில் ஹிட்லர் இருப்பார்.. காமராஜருக்கு பதில் பெரியார்.... இன்னும் பொதுவான கேள்விகளுக்கு அவர்கள் தருவதுதான் விடை... உதா. காடுகள் பயன்கள், நில, நீர் மாசு, மழைநீர் சேகரிப்பு போன்ற வினாக்களுக்கு படித்து எழுதாமல் பாடம் நடத்தும்போது நாம் விளக்கியதை மனதில் வைத்து அப்படியே அவனுடைய திறமையையும் இணைத்து எழுதியிருப்பார்கள்... அவ்வளவு சுவாரஸ்யங்கள் நிறைந்தது விடைத்தாள் திருத்தும் பணி என்பது......




100-க்கு 100-‌ஐ தவரவிட்ட மாணவர்கள்...!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் என சில மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் பாதித்தது...! இதனால் மாணவர்களுக்கு 45 நாட்கள் வரை விடுமுறையில் இருக்கநேர்ந்தது... இதனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாதாளும் கடினமும் இன்றி.. மிக எளிமையாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் கேட்கப்பட்டிருந்தது...


சமூக அறிவியல் தேர்வு எளிமையாக இருந்தது என்பது மாணவர்களின் பொதுவான கருத்து... பொதுவாக பயிற்சி வினாக்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்படும். அந்த நடைமுறையை மாற்றி மாணவர்களின் அறிவுதிறனை வளர்க்கவும், “மக்கப்“ செய்யும் முறையை கட்டுப்படுத்தவும் ஒருசில கேள்விகள் பாடபகுதியில் இருந்து கேட்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது....


அந்த வகையில் இந்த ஆண்டு கேட்கபட்ட ‌கேள்விகளில் 1 மதிப்பெண் கொண்ட சரியானதை தேர்ந்தெடுக்கும் கேள்வியில் இரண்டு மட்டுமே பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது.. அதுவும் மிகவும் எளிமையான வினாவே... அவை

வினா எண் 3) 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களைத் தாக்கி அழித்த நாடு?
அ) அமெரிக்கா ஆ) ரஷ்யா  இ) பிரான்ஸ்  ஈ)ஜெர்மனி


வினா எண் 9) “தங்க இழைப்பயிர்“ என்று அழைக்கப்படுவது
அ) தேயிலை  ஆ) காப்பி  இ) புகையிலை  ஈ) சணல்

(இந்த இரு வினாக்களுக்கும் 80 சதவீத மாணவர்கள் விடை தவறாகவே எழுதியிருந்தனர்) 



இப்படி எளிமையான இந்த இரண்டு வினாக்களுக்கு நன்றாக படித்த மாணவர்கள் கூட பதில் தவறாகவே எழுதியிருந்தனர். காரணம் இந்த இரண்டு வினாவும்  மனப்பாடம் செய்யும் பாட பயிற்சி வினாவில் இல்லை என்பதே... 100 எடுக்க வேண்டிய மாணவர்கள் கூட இந்த இரண்டு வினாக்களும் தவறானதால் 98 மதிப்பெண் மட்டுமே எடுக்க வேண்டிய சூழல் நிலவியது... இதன் மூலம் மாணவர்கள் பாடம் முழுவதையும் புரிந்துக்கொண்டு பாடத்தை ஒருமுறைகூட படிப்பதில்லை என்று தெரிகிறது... இப்படியாய் மாணவர்கள் ஒரு கட்டத்திற்குள்ளே வைத்திருக்கிறோம் என்ற குற்ற உணர்வு ஒரு ஆசிரியராக என்னை உறுத்துகிறது..... 


இவைகள் எளிமையான வினாக்கள் என்று சொல்லக்காரணம் பாடங்கள் நடத்தும்போது கண்டிப்பாக மாணவர்களுக்கு சொல்லப்படுகிறது... ஆனால் அதை அவர்கள் நினைவில்கொள்வதில்லை..  சென்ற ஆண்டு 55000 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 எடுத்தார்கள் ஆனால் அது இந்த ஆண்டு மிகக்குறைவாக இருக்கும் என்று கருதுகிறேன்...

எங்கள் பள்ளியில் இருந்து 59 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கிறார். அவர்களையும் சேர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப்பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... 

இந்தமுறை 10-ம் வகுப்புபொதுத்தேர்வு மதிப்பீட்டு மையம் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டிருந்தது... 8 நாட்கள் நடந்த இந்த மதிப்பீட்டு பணியின் போது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது வெயில் மட்டுமே...!
(படங்கள் கூகுளில் எடுத்தது)

4 comments:

  1. சாதாரண பொது அறிவு கேள்விகள்தான்! மக்கர் செய்து படிக்கும் மாணவர்கள் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். சமுகவியல் பாடம் நடத்துபவர்கள் பொது அறிவையும் கொஞ்சம் நடத்தவேண்டும். நாங்கள் படிக்கையில் அப்படித்தான் நடத்தினார்கள். நான் டியுசன் எடுத்தபோதும் அப்படித்தான் கற்றுக்கொடுத்தேன்.

    ReplyDelete
  2. பள்ளிப் படிப்பு, விடைத் தாள் திருத்தும் செயல்முறை என்று மிகவும் சுவையாக இருந்தது, பதிவு!

    அவசரடியாக வெளியிட்டதால், எழுத்துப் பிழைகள் காணக் கிடைக்கின்றன.

    ReplyDelete
  3. ஆமாம்.வேதனையாய் இருக்கிறது. நம் மாணவர்கள் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் நமது புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் மட்டுமே செய்வது தான். மற்ற மாநிலங்களை விட நமது கல்வித்தரம் குறைந்து வருவது கவலைப்பட வேண்டிய கவனிக்கப்பட வேண்டிய ஒன்று

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...