08 June, 2020

இப்படியும் சில... ஓஷோ -நகைச்சுவை கதைகள்....




தியானம்

ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள், ”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

”தோழி சொன்னாள், ’விபரம் தெரியாமல் பேசாதே. தியானம் என்பதே சும்மா இருப்பதுதான். உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.’ 

**********************




தையல்காரன். 

தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு. அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை  குட்டையாக இருந்தது. அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான், 

”இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி. இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும். கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ”சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது. இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு, ”கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள். சரியாக இருக்கும். இவ்வளவு நல்ல துணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.” என்றான் சம்பாச்சு. 

வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான். வழியில் ஒருவன் அவனைப் பார்த்து, ’இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது. இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன் என்றான். சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம். ”எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?” என்று கேட்டான். வந்தவன் சொன்னான், 

”எனக்கு எப்படித் தெரியும் என்றா கேட்கிறீர்கள்? சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.”


**********************



சந்தர்ப்பம் 

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான். எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான். ”என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன். அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன். நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள். ஒரு மனிதனை வெற்றிப்பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள், ”என்று சொன்னான். 

அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு, ”ஆமாம், எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அப்புறம் சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டான். அதற்கு அவன், ”நல்லது, இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 

**********************



ரொம்ப நல்லது 


மாக்கி என்பவள் தன பழைய சினேகிதி டோரவைக் காண மிக ஆவலுடன் வந்தாள். 

மாக்கி: ஹே டோரா, என்ன ஆச்சரியம்! உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! என்ன சமாச்சாரங்கள்? 

டோரா: ஒன்றுமில்லை, உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன். 

மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா! ரொம்ப நல்ல செய்தி தான்! 

டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை. அவன் மிகவும் மோசமானவன். 

மாக்கி: என்ன மோசமானவனா? நான் மிகவும் வருத்தப்படுகிறேன். 

டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை. அவனிடம் நிறைய பணம் இருந்தது. 

மாக்கி : பரவாயில்லையே, பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல். ரொம்ப நல்லது. 

டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை. அவன் ஒரு கஞ்சன். 

மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய். வருத்தமாக இருக்கிறது. 

டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை. அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான். 

மாக்கி: சொந்தமாக வீடா! ரொம்ப நல்ல செய்தி தான். 

டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை. அந்த வீடு எரிந்து விட்டது. 

மாக்கி: என்ன எரிந்து விட்டதா? கேட்கவே சங்கடமாக இருக்கிறதே? 

டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை. அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!


**********************

2 comments:

  1. கதைகள் அனைத்தும் அருமை...குறிப்பாக டெய்லரும் தியானமும்...வாழ்த்துகளுடன்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!