கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 January, 2015

ரஜினி மாதிரிஆத்திரப்படுவது சரிதானா..?

ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்று ஆரம்பிக்கிறது ஒரு தமிழ் பழமொழி.... நிறைய விஷயங்களில் நாம் கோவத்தில் ஒரு முடிவு எடுத்துவிட்டு பின்யோசித்தால் இதை நாமா செய்தோம் என்று நம்மையே வியப்படையும் வெட்கப்படவும் செய்யும்.... அப்படிப்பட்ட ஆத்திரம் குறித்தே இது...!
 
வாழ்க்கையில் நீங்கள் விரைந்து முன்னேற விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு வார்த்தை.... ஆத்திரப்படுவதை அடியோடு விட்டுவிட்டால் ஒழிய முன்னேற்றம் என்பது முடியாது. ஏனென்றால் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையாக, இருக்கும் பல விஷயங்களில் ஆத்திரமும் ஒன்று எப்படி...?

ஆத்திரம் என்பது ஒரு திடீர் உணர்ச்சி. அதன் காரணங்களால், அநேக சமயங்களில் கடுகளவு கூட அதற்கு வலு இருக்காது. ஆத்திரம் ஆவேசமாகக் கிளம்பும் நேரங்களில், அறிவு அநேகமாக,  நடுங்கி பயந்து பதுங்கிக் கொள்கிறது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லும்போது... புத்தி மட்டுபட்டுவிட்டால் சிந்திக்கும் ஆற்றல் சிதைந்து விடுகிறது. சிந்திப்பது என்பது தானே மனிதனையும் மிருகத்தையும் பகுத்துக்காட்டுகிறது... அனால்தான் ஆத்திரம் வந்த நேரங்களில் மனிதனும் மிருகத்துக்கு நிகராகவே நடந்து கொள்கிறான். கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொட்டித்தீர்கிறான். அப்படி அடிக்கடி மிருகமாக மாறிவிடுகிற மனிதன், எப்படி வளர்ச்சிபெற முடியும்.
 

ஒருவரிடத்தில் ஆத்திரம் வருகின்ற நேரங்களில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா...? அன்பு அணைந்து விடுகிறது. அதனால் சொற்களில் அனல் ஏறி விடுகிறது. இந்த அனல் அடுத்தவனைச் சுட, அவனிடமிருந்தும் சூடான சொற்களே வந்து விழுகின்றன. பகை ஒன்று உறுவாகிறது. அடுத்து வாய்ச்சண்டை, கைச்சண்டையாகி, கத்திச் சண்டையாகவும் மாறி விடுகிறது. ‘சண்டை என்றாலே, சம்பந்தப்பட்ட இருவருக்குமே ஏதோ ஒரு வகையில் இழப்பு என்பு நிச்சயம் தானே. 
 
உடல் ரீதியாகவும் ஆத்திரம் பல கெடுதல்களைச் செய்கிறது. மனிதனுக்கு ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவது இதுவே, அதுவில்லாமவ் அல்சர், இதயப் படபடப்பு, நரம்புத் தளர்ச்சி தலைவலி, இன்னும்பலபல.... இவையெல்லாம் வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு. வேதனை என்னவென்றால் ஆத்திரம், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களைக கூட, தூரத்தில் துரத்திவிடக கூடியது.

சரியானதற்காக இல்லாமல் தேவையில்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆத்திரப்படுகின்றவர்களின் காலமும் சரி, சக்தியும் சரி, நிச்சயம் வீணாகத் தானே போகிறது. பிறகு குறிக்கோளை நோக்கிய சிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் நேரம் எங்கே இருக்கும்? சக்தி எங்கே இருக்கும்?
 
எல்லாம் சரி, மற்றவர்கள் தொடர்ந்து தவறோ நமக்கு ஆகாததை செய்கிறபோதோ, நாம் எதிர்பார்க்காத விதமாக நடந்துகொள்கிறபோதே, நமக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்?

வரும்.  ஆத்திரம் என்பது இயற்கை... அது ஒரு மனித இயல்பு. ஆனால் அதைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி, சரியான முறையில் வெளிப்படுத்துவது என்பதில் தானே நமது புத்திசாலித்தனம் இருக்கிறது.

ஆத்திரம் என்பது யாருக்குமே வரக்கூடியது தான். ஆனால், யாரிடம் ஆத்திரப்படுவது? எதற்காக ஆத்திரப்படுவது? எந்த அளவுக்கு ஆத்திரப்படுவது? எந்த வகையில் வெளிப்படுத்துவது? என்பதில் சிலருக்கு மட்டுமே தெளிவு இருக்கும். அவர்கள் புத்திசாலிகள். அவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்.

ஆறுகளில் தண்ணீர் சீராக ஓடிக் கொண்டிருக்கும். அதிக மழை காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த வெள்ளம் கட்டுக் கடங்காமல் ஓடி பாய்ந்து விட்டால் அது காட்டாறு. ஆகிவிடும். காட்டாற்று வெள்ளம் அழிவைத் தானே தரும்.

அதேபோல ஆத்திர உணர்ச்சி மனதில் வெள்ளமாகப் பொங்கி வரும்போது, நிதானம், பொறுமை என்ற இரு கரைகளும் வலுவாக இருந்தால் தான் அழிவைத் தடுக்க ஆத்திரப்படுகிறவன்றவர்களின் நேரமும் சரி, சக்தியும் சரி, நிச்சயம் வீணாகத் தானே போகிறது. பிறகு குறிக்கோளை நோக்கிய சிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் நேரம் எங்கே இருக்கும்? சக்தி எங்கே இருக்கும்?
 

ஆத்திரத்தை அடக்குவது நல்லது என்றாலும் அதனினும் நல்லது ஆற்றுப்படுத்துவது. அதாவது ஆறப்போடுவது. இரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. அடக்கி வைப்பது ஒருநாள் வெடிக்கலாம். ஆறப் போடுவது சூட்டை மட்டுமே இழக்கும் சுவையை இழக்காது.

கொதிக்க கொதிக்க் கொடுப்பப்படும் காபியை, அப்படியே குடித்தால் நாக்கு வெந்துவிடும். தேவையான அளவுக்கு ஆற்றிய பிறகு அருந்தினால் ரசித்துப் பருக முடியும். அதனால் தான் அவ்வையும் அடக்குவது சினம் என்று பாடாமல், ஆறுவது சினம் என்று பாடினார். ‌
 
ஆத்திரத்தில் அறிவிழப்பது முறைப்பும் எதிர்ப்பும் கிளம்பும். பின்னது வருத்தத்தை வரவழைத்து, மன்னிப்பைக் கேடக வைக்கும். ஆரப்போட்டு பொருமைக்காப்பதில் வெப்பமில்லாத வெளிச்சம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட இருவர்க்கிடையேயும் ஒரு புரிதல் அங்கே நிகழ்கிறது. உணர்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு அறிவு செயல்புரிகிறது. ஆக்கம் விளைகிறது.

நமக்கு வேண்டியது ஆக்கமா? அழிவா?

நம் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் போது, யார் என்ன சொன்னாலும் நம்காதில் விழுவதில்லை... யாராவது சரியான தீர்வையோ அல்லது நல்ல கருத்தை‌ சொன்னாலும் அது நம் காதில் விழாது... எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

தீக்குச்சிக்கு தலையும் உண்டு. உடலும் உண்டு. அது தீப்பெட்டியில் உரசும் போதெல்லாம், தான் முதலில் எரிந்து, முடிந்தால் பிறபொருளையும் எரிக்கிறது.

மனிதனுக்கும் உடலும் உண்டு. தலையும் உண்டு. அவனும் தினமும் பிறமனிதர்களோடு உரசிக்கொண்டு தான் இருக்கிறான். ஆனால், அவன் தலைக்குள் அறிவு என்னும் அற்புத விஷயம் இருக்கிறது. அந்த அறிவை அலட்சியப்படுத்தும் போது அவனும் தீக்குச்சியாகிறான். அழிகிறான்.

 
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்... (குறள் 301)

 
பொருள் : சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்.... என்கிறார் வள்ளுவர்.
 
ஆத்திரத்தை கட்டுப்படுத்துவோம்... அதை சரியான முறையில் கையாள பழகுவோம்... ஆத்திரம் என்பது மனிதனை மனிதாக வைத்திருக்கும் ஒரு சிறந்த ஆயுதம்.. ஆனால் அது அதிகாகும்போதுதான் நம்மை மிருகமாக மாற்ற ‌வாய்ப்பிருக்கிறது..! சரியாக மற்றும் அளவோடு பயன்படுத்துங்கள் ஆத்திரமும் அழகுப்படும். முன்னேற்றமும்... வெற்றியும் கிட்டும்... விட்டுவிடுவோம் ஆத்திரத்தை...!

டிஸ்கி:(முன்னமாதிரியே தலைப்பில் ரஜினியின் பெயர் இக்கட்டுரை படிக்கவைக்கவே.... நன்றி ரஜினி சார்...)

3 comments:

  1. சிறப்பான கருத்துக்கள்!

    ReplyDelete
  2. ஆத்திரத்திற்கு அன்பு ஒன்றே சிறந்த மருந்து...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...