கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

08 October, 2012

நாட்டில் கோயில்களைவிட கழிப்பறைகளே முக்கியமானவை



முதலில் உங்களிடம் ஒரு கேள்வி...?
எல்லா இடத்தையும் கோவில்களாக பாவிக்கலாம் ஆனால் எல்லா இடத்தையும் கழிவறையாக பாவிக்க முடியுமா..? 

நம் நாட்டில் நடந்துக்கொண்டிருப்பது இதுதான். மக்கள் அனைத்து இடத்தையும் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். நாட்டில் கோயில்கள் இருக்கும் அளவிற்கு கூட கழிவறைகள் இருப்பதில்லை. கிராம பகுதிகளில் 100 வீடுக்கு கணக்கு எடுத்தால் 1 அல்லது 2 வீடுகளுக்குதான் கழிவறை வசதியுள்ளது. இந்திய மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிமான மக்கள் போதிய சுகாதர வசதியில்லாமல் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

“கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை” என்று கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்கக்கோரி பல்வேறு கட்சியினர் நேற்று முற்றுகையிட்டுள்ளனர். சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுத்து கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், கோயில்களைவிட கழிப்பறைகள் முக்கியமானவை. போதுமான கழிப்பறைகள் அமைக்கப்படாதது வருத் தம் அளிக்கிறது. கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை என்றார். இதற்கு பா.ஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்த எதிப்பு அர்த்தமற்றது, முட்டாள்தனமானது.. நானும் பல்வேறு கோயில்களுக்கு சென்றிருக்கிறேன். அனேக கோயில்களில் சரியான சுகாதரவசதிகள் செய்துகொடுப்பதில்லை. மனிதர்கள் சுத்தமாக இருந்தால் தானே அவனுடைய பக்தியும் சுத்தமாக இருக்கும். நான் அறிந்ததில் திருப்பதி தேவஸ்தானம் மட்டுமே ஓரளவுக்கு போதிய கழிப்பறை வசதிகளை செய்துக்கொடுத்திருக்கிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்துகொடுக்க வில்லை என்றால் எப்படி...? அந்த கோயிலின் சுற்றுப்புறத்தை பாருங்கள் அவ்வளவு படுகேவலமாக இருக்கும். கிராமப்பகுதிகள் என்று எடுத்துக்கொண்டால் கழிவறையாக சாலை ஓரங்கள் விவசாய நிலங்கள், காலிப்பகுதிகள் இவைகளே பயன்படுத்தப்படுகிறது. இவைகளினாலே சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. பெருநகரங்கள் பற்றி நான் சொல்லதேவையே இல்லை...
 

கிராமங்கள் தோறும் கழிப்பறை வசதியை அரசு செய்துக்கொடுக்க மானியமாக ரூ. 5000 தருகிறார்கள் அது பயணாளிகளின் கைகளில் வெறும் 3500 அல்லது 4000 மட்டுமே சென்றடைகிறது. ஒரு கழிவறை கட்ட கிட்டதட்ட 10 முதல் 15 ஆயிரம் வரை செலவுபிடிக்கும் என்பதால் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்ட மக்கள் ஆர்வம்காட்டுவதில்லை. 

இந்தியாவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், திரையரங்குகள், கடைத்தெருக்கள், சந்தைகள் என எங்கும் பொது கழிப்பறைகளை காணமுடிவதில்லை அப்படி இருந்தாலும் அவைகள் பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை. இந்த அவலம் மாறவேண்டும். தற்போதுகூட உச்சநீதிமன்றம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாயம் கழிவறை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என அரசுக்கு உத்திரவிட்டது அனைவருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இந்நிலை மாறவேண்டும். என்னுடைய கருத்தும் இதுதான் ஒரு நாட்டுக்கு கோயில்கள் அவசியம் தான் அதைவிட கழிவறைகளே மிகமிக அவசியம். ஒவ்வொறு மக்களும் சுகாதாரத்துடன் ஆரோக்கியமாக இருந்துவிட்டாலே போதும் அதன் பிறகு பக்திக்கு வேலையிருக்காது.
Related Posts Plugin for WordPress, Blogger...