முத்து திரைப்படம் சர்வதேச அளவில் சாதனைப் படைத்த முதல் இந்தியப் படமாகும்.  டான்சிங் மகாராஜா எனும் பெயரில் இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி 250  நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் சாதனைப் படைத்தது. இந்தியப் படங்களுக்கு  வெளிநாடுகளில் மார்க்கெட் உள்ளதை நிரூபித்து, புதிய வர்த்தகத்தைக் காட்டிய  படம் முத்து. ரஜினியின் நடனமும், ரஹ்மானின் இசையும் சர்வதேச மக்களையும்  ஆட்டி வைத்தன. 
அடுத்த படமான எந்திரன், ரஜினியை இந்திய சூப்பர்  ஸ்டார் என்ற வட்டத்திலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்துக்குக்  கொண்டுபோனது. ரூ 380 கோடி வரை வசூலைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன்  படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 
**********************************************************************************
சிறுத்தை - கண்டிப்பா சீறும்!
  கோலிவுட்டில் தற்போது பறப்பது  சூர்யா-கார்த்தியின் சகோதரர்கள் கொடிதான். இவர்களின் படம் என்றால்  வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வரிந்துகட்டி  நிற்கிறார்களாம் வாங்க. சூர்யாவின் 'சிங்கம்' வசூலில் செய்த சாதனையை  கார்த்தியின் 'சிறுத்தை' விஞ்சும் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில்  கிசுகிசுப்பதால் படத்திற்கு இப்போதே ஏகப்பட்ட வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது.
இதை  உறுதிபடுத்தியிருக்கிறது அண்மையில் நடைபெற்ற 'சிறுத்தை' படத்தின் பாடல்கள்  வெளியீட்டு விழா. விழாவில் திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும், டிரைலரும்  வந்திருந்த கார்த்தியின் ரசிகர்களை மட்டுமல்லாது வினியோகஸ்தர்களையும்  குஷிப்படுத்தியிருக்கிறது.
ஒரு பக்கம் சந்தானத்துடன் சேர்ந்து  காமெடியில் கலக்கியிருக்கும் கார்த்தி, மறுபக்கம் காரசாரமான போலீஸ்  அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். எப்போதும் ஜாலியான கேரக்டரில் நடித்த  கார்த்தி எப்படி கம்பீரமான போலீஸாக நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு  விழாவிற்கு வந்திருந்த அனைவருடைய முகத்திலும் தெரிய "கார்த்தி தன்னோட  செல்போன்ல இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷன்ல நடிச்ச ரவி தேஜா படத்தை  வச்சிருப்பாரு. இப்படி ஒரு டெடிக்கேஷனை நான் யாருகிட்டயும் பார்த்ததில்லை.  அப்போதே எனக்கு தெரிந்தது இந்த கேரக்டர்ல கார்த்தி கலக்கியிருப்பாருன்னு,  அதை டிரைலர் உறுதிபடுத்தியிருக்கு" என்று பேசி தெளிவுபடுத்தினார் இயக்குநர்  லிங்குசாமி.
இந்த படத்தின் கடைசி பாடலுக்காக ரொம்பவும்  மெனக்கெட்டாராம் இயக்குநர் சிவா. "இன்னும்..இன்னும்.."என்று சொல்லி 25  பாடல்களை உருவாக்கி அதில் ஒன்றை தேர்வு செய்தாராம். வேறு எந்த படத்திற்கும்  ஒரு பாடலுக்காக இத்தனை பாடல்கள் போட்டதில்லையாம் வித்தியாசாகர்.
********************************************************************************* 
காதலில் விழுந்தேன் - அனுஷ்கா
பெரும்பாலான நடிகைகள் தாங்கள் காதலிப்பதை ஒப்புக்கொண்டதே இல்லை. ஆனால்  இவர்களில் சற்று வித்தியாசமானவர் நடிகை அனுஷ்கா. எந்தவொரு விஷயத்தையும்  வெளிப்படையாக பேசும் அனுஷ்கா, தான் ஒருவரை காதலிப்பதாக ஒப்புகொண்டுள்ளார்.
இரண்டு  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா, அருந்ததீ படத்தின் மூலம்  பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நாயகியாக வலம்  வந்து கொண்டு இருக்கிறார் அனுஷ்கா.
இந்நிலையில் தனியார் டி.வி.  ஒன்றில் பேட்டியளித்த அனுஷ்கா, என்னுடன் நடித்த பல ஹீரோக்களுடன், என்னையும்  இணைத்து பல கிசுகிசுக்கள் வந்தன. ஐந்து ஹீரோக்களோடு திருமணமும் செய்து  வைத்துவிட்டார்கள், அவையாவும் வதந்திதான்.
ஆனால் நான் ஒருவரை  காதலித்து வருகிறேன். அவரும் என்னை அதிகமாக காதலித்து வருகிறார். அவர் யார்  என்று இப்போது கூற முடியாது. அவர் பெயரை சொன்னால் பலரும் தங்களது  புருவத்தை உயர்த்துவார்கள், இதனால் அவர் பேரை சொல்ல விரும்பவில்லை.  தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன்.
படங்கள் அனைத்தையும் முடித்த பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
 
**********************************************************************************
காதலிக்க நான் ரெடி - பாவனா 
மலையாள திரையுலகில் இப்போது ஹாட் நியூஸ் பாவனா தான். இதற்கு காரணம், தான் ஒரு இளம் நடிகரை காதலிப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
சித்திரம்  பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா, வெயில், தீபாவளி, கூடல்நகர்,  ராமேஸ்வரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தை சேர்ந்த  பாவனா தமிழை காட்டிலும் மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ளார்.
இதனிடையே  இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், வீட்டில் அவருக்கு மாப்பிளை  தேடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் ஒரு இளம் நடிகரை  காதலிப்பதாக நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பாவனா  கூறுகையில், நான் காதலிக்கவில்லை என்று ஒரு போதும் பொய் சொல்ல மாட்டேன்.  அதேசமயம் எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணத்தில்  முடியபோகிறது என்று நினைக்கவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒற்றுமை  இருக்கிறது. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, இரண்டு வருடங்கள்  கழித்து செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதுவரை நடிப்பில் முழுகவனம்  செலுத்துவேன் என்றார்.
கடைசிவரை அந்த நபர் யார் என்று கூறமறுத்துவிட்டார். இருப்பினும் அவர் மலையாளத்தை சேர்ந்தவர் அல்ல, என்று மட்டும் தகவல் தெரிவித்தார்.
***********************************************************************************
நாங்களும் கிரிக்கெட்   ஆடுவோம்ல.. 
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிகிய மொழித் திரை நட்சத்திரங்கள்  பங்குப்பெறும் கிரிக்கெட் போட்டி வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற  உள்ளது.
'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்'(CCL) என்று  பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டி ரஜினிகாந்த் உட்பட இந்தியாவின் முன்னணி  நட்சத்திரங்களின் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும்  வருவாயை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த இருக்கிறார்கள்.
இந்த  அமைப்பின் அறிமுக விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு தமிழ் நட்சத்திர அணியை நடிகர் சங்க தலைவர் சரத்குமார்  அறிமுகப்படுத்தினார்.
ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய நான்கு  நாட்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான கோலிவுட் அணியில் ஜெயம் ரவி,  தனுஷ், கார்த்தி, சிம்பு, அப்பாஸ், ஷாம், ஜெய், ரமணா, அம்சவர்தன்,  விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்  இருக்கிறார்கள். மேலும் அணியின் ஐகான் வீரர்களாக சூர்யாவும், விஜயும்  இருப்பார்கள். இதில் சூர்யா ஐகான் வீரராக இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது. விஜயுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
20  ஓவர் கொண்ட இந்த போட்டியின் இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.25  லட்சம் பரிசு அளிக்கப்படும். இதை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த  இருக்கிறார்கள்.
தெலுங்கு, கன்னடம், இந்தி, போன்ற அணிகளுக்கு பல  கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். அதே போல கோலிவுட் அணிக்கு  'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது
 
***********************************************************************************
அமலா பால்   விலகல்
ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்திலிருந்து நாயகி அமலா பால் மற்றும் ஹீரோ விமல் இருவருமே விலகிவிட்டனர். 
ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ ஆர் முருகதாஸ் ஒரு  படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரிடம் உதவியாளராக இருந்த சரவணன்  இயக்குகிறார்.  
இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படத்தில் நடிக்க ஜெய், அஞ்சலி,  களவாணி படத்தில் நடித்த விமல், மைனா புகழ் அமலா பால் ஆகியோர் நடிக்க  ஒப்பந்தமாகியிருந்தனர். டிசம்பர் 15-ம் தேதி படப்பிடிப்பும் ஆரம்பித்த  நிலையில், இதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர் அமலாவும் விமலும்.  ஜெய் - அஞ்சலிக்கு அடுத்த நிலையில் நடிக்க விரும்பாததால் விலகுவதாக  விளக்கம் அளித்துள்ளனர்.  
இப்போது விமலுக்குப் பதில் தெலுங்கு ஹீரோ சர்வானந்த் நடிப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அமலாவுக்குப் பதில் வேறு நாயகியைத் தேடி  வருகின்றனர்.  
அதே நேரம், இந்தப் படத்திலிருந்து கழன்று கொண்ட அமலாவும் விமலும்,  பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜ் படத்தில் நாயகன் நாயகியாக  ஒப்பந்தமாகியுள்ளனர்.  
இந்த வாய்ப்புக்காகவே, முருகதாஸ் படத்தை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.
**********************************************************************************   
சிக்கலோ சிக்கல் - குழப்பத்தில் காவலன் 
நடிகர் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ் படம் வெற்றியை தந்தது.  அதனால் அப்படத்தின்  இயக்குநர் சித்திக்குடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்தார் விஜய்.   மலையாளத்தில் வெளிவந்த பாடிகாட் என்ற படத்தையே தமிழில் இயக்குவது என்று  முடிவானது.  மலையாளத்தில் இயக்கியவரும் சித்திக்தான். 
சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த  காவல்காரன் படத்தின் டைட்டில் இந்தப்படத்திற்கு வைக்கப்பட்டது.    என்  அனுமதி இல்லாமல் எப்படி இந்த டைட்டிலை பயன்படுத்தலாம் என்று கண்டனம்  தெரிவித்ததோடு இந்த டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துவிட்டார்  ஆர்.எம்.வீரப்பன். 
இதையடுத்து காவல் காதல் என்று மாறி பின்பு காவலன் என்று பெயர்மாற்றப்பட்டது. 
மலையாளத்தில் வெளியான பாடிகாட் கதையின் உரிமை  கோகுலம் நிறுவனம் வாங்கி  வைத்துள்ளது.   இதே கதையை  கொஞ்சமும் மாறாமல் எப்படி தமிழில் எடுக்கலாம்  என்று கோகுலம் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் காவலன் படத்திற்கு தடைகோரியது. 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  கோகுலம் நிறுவனத்திற்கு 1.80 கோடியை வழங்கிவிட்டு காவலன் படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டார். 
தியேட்டர் அதிபர்கள் விஜய் நடித்து ஏற்கனவே வெளிவந்த படங்களுக்கான நஷ்ட  ஈட்டை கொடுத்தால்தான் படத்தை திரையிடுவோம் என்று கொடி பிடித்துள்ளனர்.  அந்த சிக்கலில் இருந்தே விஜய் இன்னும் மீளவில்லை.  இந்நிலையில் இந்த புதிய  சிக்கலில் சிக்கியுள்ளார் நடிகர் விஜய்.
**********************************************************************************
 எப்போ கிளைமேக்ஸ் தெரியல..

 
நடிகர் ஆகாஷ்க்கும், வனிதாவுக்கும் பிறந்த மூத்த மகன் விஜய்ஸ்ரீஹரியை,  வனிதாவிடம் இருவாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜயகுமார் அவரது மகள் நடிகை வனிதா இடையே  சமீபத்தில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வனிதாவிடம் இருந்த  மகன் விஜய்ஸ்ரீஹரியை அவரது முன்னாள் கணவர் ஆகாஷ் அழைத்துச் சென்றார்.  ஆகாஷிடம் உள்ள மகனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா சென்னை ஐகோர்ட்டில்  ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்  தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் விஜய்ஸ்ரீ ஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த  உத்தரவிட்டனர். இதையடுத்து ஆகாஷ், விஜய்ஸ்ரீ ஹரியை கோர்ட்டில்  ஆஜர்படுத்தினார். அவர் தாக்கல் செய்த மனுவில், வனிதா - விஜயகுமார் இடையே  ஏற்பட்ட சண்டையால் விஜய்ஸ்ரீ ஹரி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால்  அவன் என்னுடன் வாழ விரும்புகிறான். வனிதாவுடன் வசிக்கும் ஆனந்தராஜ்  விஜய்ஸ்ரீஹரியை கேவலமாக நடத்துகிறார். இதனால் அவன் பெரியவனாகும் வரை  என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை  விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு கூறினார்கள். அவர்கள் கூறும் போது,  முன்னாள் கணவர் ஆகாஷ் இரண்டு வாரத்தில் விஜய்ஸ்ரீஹரியை வனிதாவிடம்  ஒப்படைக்க வேண்டும். மேலும் அவன் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை  குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று  உத்தரவிட்டனர் 
 **********************************************************************************       
அம்மா சென்டிமென்ட் 
"தென்மேற்குப் பருவக்காற்று" இன்னும் இரண்டு நாட்களில் வெளிவர இருக்கும்  இப்படம், தாய்மையின் பெருமையை பேசும் படமாகவும், காதலின் கண்ணியம் பேசும்  படமாகவும் வெளிவர இருக்கிறது.
இது தாயை போற்றும் தனயனை பற்றிய கதை  அல்ல... தனயனை தாய் காப்பாற்றும் கதை என்பதால் ஹீரோயிசத்தையே விரும்பும்  நம் ஹீரோக்களில் பலர் இந்த கதையை கேட்டுவிட்டு நடிக்க மறுத்துவிட்டனர்.  அதனால் விஜய் சேதுபதி எனும் கூத்துப்பட்டறை கலைஞரை கதாநாயகராகவும், அவரது  ஜோடியாக வசுந்தரா சியேட்ரா நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும்  இப்படத்தின் நாயகன், நாயகி என்றாலும் சரண்யா, பொன் வண்ணன் தான் இப்பட  கதையின் நாயகி என்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.
என்.ஆர்.ரஹ்நந்தன்  இசையில் தாய்மையையும், தாயையும் பற்றியும் கூறும் பாடல்கள் இப்பொழுதே  பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அருள்தாஸ் ஒளிப்பதிவில், க்ளோபல்  இன்ஃபோடெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக எஸ்.மைக்கேல் ராயப்பன்  வழங்கும் இப்படத்தை, ஜோதம் மீடியா ஒர்க்ஸ் சார்பில் மிலிட்டரி கேப்டன் ஷிபு  ஐசக் தயாரிக்கிறார். 
நாடோடிகள் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தனது  நிறுவனத்தின் சார்பில் வாங்கி வெளியிட காரணம் தாய்மையை போற்றும்  "தென்மேற்குப் பருவக்காற்று" படத்தின் கதையும், காட்சிகளும் தன் தாயை  ஞாபகப்படுத்தியது தானாம். இதுமாதிரி படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்  அவரது தாயும் ஞாபகத்திற்கு வருவார்! என அடித்து கூறுகிறார் இந்த  தயாரிப்பாளர்! 
***********************************************************************************
 சீமான் படத்தில் விஜய்..!
தம்பி படத்தை அடுத்து வாழ்த்துகள் படத்தை இயக்கினார் சீமான். கடந்த ஓராண்டு  காலமாகவே சூடான பேச்சு நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கை என அலையும்  சீமான். என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி எனக் கூறியுள்ளார்.  .இதுகுறித்து இயக்குநர் சீமான், 
‘’நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய  படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை  உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம்  அமையும்’’என்று தெரிவித்துள்ளார்.தயாரிப்பாளர் தாணு, ‘’சச்சின் படத்திற்கு  பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி  நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக  உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று  தெரிவித்துள்ளார். இந்தப்படத்திற்கு பகலவன் என்று டைட்டில்  வைத்திருக்கிறார். 
நண்பர்களே இந்த பகுதியை தொடர வாக்களியுங்கள்